அச்சம் போக்கி, நம்பிக்கையூட்டும் செயல்பாடு தேவை -இரா.முத்தரசன்

கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,927 பேர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் சென்னையில் மட்டும் 1,392 பேரை பாதித்துள்ளது. மேற்கண்ட தகவல் தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதாகும். ஆனால் இதனைவிட நோய் தொற்று அதிகம் என்றும், பலியானவர்கள் எண்ணிக்கை அரசு அறிவிப்பதைவிட அதிகம் என்றும் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றது. சுகாதாரத்துறை செயலாளர் திருமதி.பீலா ராஜேஷ் அவர்கள் சென்னையில் உயிர் இழந்தோரின், உயிர் இழப்பிற்குரிய காரணத்தை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தோர் குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வரும் அறிக்கைகளில் முரண்பாடு உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகின்றது. ஊரடங்கு மார்ச் முதல் முழுமையாக அமுல்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைவதற்கு மாறாக நாள்தோறும் அதிகரித்து, மக்களை அச்சமடைய வைத்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பரிசோதனையை அதிகப்படுத்தி குறிப்பாக சென்னை மாநகரில் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, அரசே நேரடியாக மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டும். மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. மக்களிடத்தில் காணப்படும் அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாது அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்