கடப்பிதழ் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம்

சென்னை, ஆகஸ்ட் 05, 2020: கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்தில் உள்ள பொது விசாரணை அறைகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். இருப்பினும், நிலுவையில் உள்ள அவசரமான கடப்பிதழ் விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் ஸ்கைப் மூலம் வீடியோகால் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி 05.08.2020 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில், நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்ள, விண்ணப்பதாரர்கள், அனைத்து வேலை நாட்களிலும் காலை பத்து மணி முதல் பிற்பகல் 12.30 வரை, Regional Passport Office Chennai என்ற ஸ்கைப் ஐடி-யில் தொடர்பு கொள்ளலாம். இந்த ஸ்கைப் வீடியோகால் வசதி பொது விசாரணைக்கு பொருந்தாது, இது அவசர விசாரணைக்கு மட்டுமே. கடப்பிதழ்கள் தொடர்பான பொது விசாரணைகளுக்கு 1800-258-1800 என்ற டோல் ஃப்ரீ எண்ணை தொடர்பு கொள்ளலாம். rpo.chennai@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பலாம் என்று பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.