கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய சக மீனவர்கள்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.11.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் இராமேஸ்வரம் கடல்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்த சம்பவத்தில் கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய சக மீனவர்களின் வீரமிக்க செயலை கௌரவிக்கும் விதமாக கேடயம் வழங்கி பாராட்டினார்.

அதன்பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது. 25.11.2019 காலை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து படகில் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த திரு.ம.அலெக்ஸ் பாண்டியன் (வயது 34) திரு.மு.நாகுரான் (வயது 47) திரு.கி.கோபி (வயது 36) திரு.ம.குமார் (வயது 35) ஆகியோர் கடலில் மீன்
பிடிப்பதற்காக சென்றனர். இம்மீனவர்கள் சென்ற படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததையடுத்து படகில் சென்ற 4 மீனவர்களும் கடலில் தத்தளித்துள்ளனர். அப்போது இம்மீனவர்கள் சென்ற படகில் இருந்த வயர்லஸ் தொலை தொடர்பு கருவியின் மூலம்அருகே 4 நாட்டிக்கல் மைல் தொலைவில் படகில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த சக மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இம்மீனவர்கள் உடனடியாக செயல்பட்டு கடலில் தத்தளித்த மீனவர்களை எவ்வித பாதிப்புமின்றி காப்பாற்றியுள்ளனர். சக மீனவர்களின் உயிரை காப்பாற்றிய இம்மீனவர்களின் வீரமிக்க செயல் மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும். அந்த வகையில் மீனவர்களை காப்பாற்றிய இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த திரு.சி.அருள் வெனிஷ் (வயது 33) திரு.அ.கென்னடி (வயது 57) திரு.க.செல்வம் (வயது 55) திரு.அ.செல்வராஜ் (வயது 56) ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கேடயம் வழங்கி பாராட்டப்பட்டுள்ளது என தொpவித்தார். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் காப்பாற்றப்பட்ட மீனவர்களையும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த நிகழ்வின்போது மீன்வளத்துறை துணை இயக்குநர் திருமதி.எம்.வி.பிரபாவதி உதவி இயக்குநர் திரு.டி.திருநாவுக்கரசு வட்டாட்சியர் திரு.அப்துல் ஜபார் உட்பட அரசு அலுவலர்கள் மீனவர் சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் உடனிருந்தனர்.