கீழ்பாக்கத்தில் செல்போன் பறித்துச் சென்ற குற்றவாளிகளில் ஒருவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல்நிலைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிவா, வ/21, த/பெ.பரதன் என்பவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் தங்கி, நியூ ஆவடி சாலையிலுள்ள சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். சிவா 15.9.2019 அன்று நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில், கீழ்பாக்கம், நியூ ஆவடி சாலை மற்றும் கீழ்பாக்கம் கார்டன் சாலை சந்திப்பு அருகே செல் போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தபோது, சிவாவுக்கு பின்னால் டியோ இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சிவாவின் செல் போனை பறித்துக் கொண்டு தப்பினர். உடனே சிவா சத்தம் போடவே, அவ்வழியே ராஜிவ்காந்தி பொது மருத்துவமனைக்கு அலுவலாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த T-11 திருநின்றவூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் M.பரமசிவம் (மு.நி.கா.32810) என்பவர் சிவாவிடம் விவரம் கேட்டபோது 2 பேர் செல்போன் பறித்துக் கொண்டு தப்பியது தெரியவந்தது. உடனே, காவலர் பரமசிவம் தனது இருசக்கர வாகனத்தில் சிவாவை ஏற்றிக் கொண்டு செல்போன் பறிப்பு திருடர்களை துரத்திச் சென்று, கீழ்பாக்கம், மம்மி டாடி அருகில் குற்றவாளிகளின் இருசக்கர வாகனத்தை மடக்கி, பின்னால் அமர்ந்திருந்த நபரை காவலர் பரமசிவம் பிடித்தபோது, மற்றொரு குற்றவாளி டியோ இருசக்கர வாகனத்துடன் தப்பினார். பின்னர் காவலர் பரமசிவம் பிடிபட்ட குற்றவாளியை G-3 கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் பிடிபட்ட குற்றவாளியின் பெயர் சூர்யா (எ) மேகசூர்யா, வ/20, த/பெ.முரளி, எண்.2/3, சுப்பிரமணிய பாரதி தெரு, திருவி.க.நகர், சென்னை என்பதும், இவர் மீது சென்னையில் செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறி தொடர்பாக சுமார் 40 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. சிவாவின் செல்போனுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற விஸ்வா என்ற குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் தப்பியோடிய குற்றவாளி விஸ்வா, வ/19, த/பெ. தனவாசகர், எண்.67, பழைய வாழைமாநகர், ஓட்டேரி என்பவர், ஓட்டேரி பகுதியில் ஒருவரை பீர்பாட்டிலால் தாக்கிய குற்றத்திற்காக, ஓட்டேரி போலீசாரால் 16.09.2019 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தக்க சமயத்தில் விரைந்து செயல்பட்டு செல்போன் பறிப்பு குற்றவாளியை மடக்கிப் பிடித்த T-11 திருநின்றவூர் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் M.பரமசிவம் (மு.நி.கா.32810) என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா. விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 17.9.2019 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.