சின்ன அண்ணாமலை நூறறாண்டு விழா = கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

விடுதலைப் போராட்ட வீரரும், பதிப்புலகின் பிதாமகன் என போற்றப்படும் நகைச்சுவை மன்னன் திரு சின்ன  அண்ணாமலை அவர்களின் நூற்றாண்டு விழா ஆகஸ்ட் புரட்சி நடைபெற்ற 9 ஆம் தேதி முதல் சுதந்திர நாளான  ஆகஸ்ட் 15 வரை மிகச்சிறப்பாக கொண்டாடுவதென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 1920  ஆம் ஆண்டு ஜுன் 18 அன்று பிறந்த சின்ன அண்ணாமலை ‘தமிழ் பண்ணை’ என்ற பதிப்பகத்தை தொடங்கி  கலையுலகிலும், அரசியல் துறையிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டவர்.

1942 இல் காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ மற்றும் ‘ஆகஸ்ட் புரட்சி’ தொடங்கிய  போது சின்ன அண்ணாமலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த செய்தி தீயாக பரவியதும்  தேவகோட்டையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் சின்ன அண்ணாமலையை அடைத்து வைத்திருந்த திருவாடனை சிறையை  உடைத்து விடுதலை செய்து அவரை தூளில் தூக்கி அமர்த்திக் கொண்டு வெள்ளையனே வெளியேறு முழக்கங்களுடன்  தேவகோட்டையில் ஊர்வலமாக சென்றதை எவரும் மறந்திட இயலாது. இதைத்தான் ‘தேவகோட்டைப் புரட்சி’ என்று  வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, ம.பொ.சி., நடிகர் திலகம்  சிவாஜி ஆகியோரிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர். சென்னை, தியாகராய நகர் பகுதியில் சின்ன அண்ணா மலையின் தமிழ் பண்ணை பதிப்பகம் இலக்கியவாதிகளின் புகலிடமாக விளங்கியது. அது தமிழ்  எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக மாற்றம் பெற்றது. ராஜாஜி, சத்தியமூர்த்தி, டி.கே.சி., கல்கி, வ.ரா,  டி.எஸ்.சொக்கலிங்கம், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, கண்ணதாசன், நாடோடி போன்ற மாபெரும் தமிழ் எழுத்துலக  வேந்தர்களின் புத்தகங்களை வெளியிட்ட பெருமை தமிழ் பண்ணைக்கு உண்டு. தமிழகப் பதிப்புலகிற்கு முன்னோடியாக விளங்கியவர் சின்ன அண்ணாமலை.

திரைப்படத்துறையில் நிறைய படங்களுக்கு கதை, வசனம் எழுதி தயாரித்து வெளியிட்டவர். தேசிய செல்வராகவும்,  தியாகச் செம்மலாகவும், தமிழ் தொண்டராகவும், தமிழ் பதிப்பகத்தின் பிதாமகராகவும் விளங்கி பல அரிய சாதனைகளை  படைத்த தியாகி சின்ன அண்ணாமலை அவர்களின் நூற்றாண்டு விழாவை, தேசிய எழுச்சி விழாவாக கொண்டாடுவது  காங்கிரஸ் கட்சி தமது கடமையாக கருதுகிறது. அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற தலைவராகப் பொறுப்பேற்று, தமது  நகைச்சுவையான பேச்சாற்றல் மூலம் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை  காங்கிரஸில் சேர்த்த பெருமை தியாகி சின்ன அண்ணா மலைக்கு உண்டு. எனவே, தேசியம் வளர்த்த தியாகி சின்ன  அண்ணாமலை நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை
தேசிய எழுச்சி விழாவாக கொண்டாடுவதற்கு குழு அமைக்கப்பட்டு அவருக்கு பெருமையும், புகழும் சேர்க்கிற வகையில்  தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்று தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்.அழகிரி