விமான நிலையங்கள் ஆணையகத்தின் பெயரில் வெளியாகும் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்ப வேண்டாம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னை, செப்டம்பர் 01, 2020: விமான நிலையங்கள் ஆணையகத்தின் பெயரில் போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக எச்சரிக்கை செய்துள்ள விமான நிலையங்கள் ஆணையகத்தின் சென்னை அலுவலக துணைப் பொது மேலாளர் திரு எஸ் ரவி, இத்தகைய போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இந்திய விமான நிலையங்கள் ஆணையகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் முன்னணி நாளிதழ்களிலும், www.aai.aero என்ற ஆணையகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் மட்டுமே வெளியிடப்படும் என்றும் மேலும் கூறியுள்ளார். கைபேசியில், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் செய்திகள் வாயிலாகப் பெறப்படும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறித்து கவனமாக இருக்குமாறும், இத்தகைய விளம்பரங்களைப் பற்றி இந்திய விமான நிலையங்கள் ஆணையக அலுவலகத்திற்கோ, காவல் துறைக்கோ தெரிவிக்குமாறும், அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாந்தால் அதற்கு ஆணையகம் பொறுப்பல்ல என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.