உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி மாவட்டஆட்சித் தலைவர் தி.சினேகா முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் குறைதீர் கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 365 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இதில், குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா, கலைஞர் கனவு இல்லம், நகர்ப்புற வாழ்விடமேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடு, தகன மேடை வேண்டியும், பல்வேறு கோரிக்கை மனுக்கள் அமைச்சரிடம் அளிக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாற. அறிவுறுத்தினார். இக்குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் காதொலி கருவி வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தார், அம்மனுவினை பரிசீலித்து உடனடியாக அவருக்கு  காதொலி கருவி வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் ரூ.3.88  இலட்சம் மதிப்பிலான கடன் உதவி தொகையினை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம்,  கீரப்பாக்கம் திட்டப்பகுதியில் தேர்வு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் 15 நாட்களில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகைபுரிய இருப்பதால் பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்குவதற்கான உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக வேளாண் மற்றும் விவசாய பணிகள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், இந்த குறை மின்னழுத்தம்  மற்றும் மின்தடை ஏற்படுவதாக புகார்கள் அதிகளவில் வந்துள்ளது. மனுக்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்குமாறு  மின்சார துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் மு.பாபு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.ச.நாராயண சர்மா, செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், திருப்போரூர் ஒன்றிய குழுத் தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், நிர்வாக செயற் பொறியாளர் குமரேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.