இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தி வன்முறையை தூண்டும் சமூக விரோதிகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 22.07.2020 ஆர்ப்பாட்டம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம், (பாலன் இல்லம்) சென்னை மாநகர்,  தியாகராய நகரில் உள்ள செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு  வருகின்றது. 8 அடுக்கு மாடி கொண்ட கட்சி அலுவலகத்தின் பெயர் பலகை உள்ளிட்ட புகைப்படத்தை முகநூலில் பதிவு  செய்து, அதன் தலைப்பில் “விபச்சார விடுதி” என்று ஆபாச வார்த்தையை விஸ்வா.எஸ் என்பவர் பதிவு செய்து கட்சி  உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என அனைவரையும் ஆத்திரமூட்டப்பட்டுள்ளனர். இத்துடன் பெண் உரிமை  செயல்பாட்டாளர் ஒருவர் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தவறான நோக்கத்துடன் வெளியிட்டுள்ளார். இந்த மோசமான குற்றச்செயல் ஒருவரால் மட்டும் செய்யப்படக் கூடியது அல்ல. மதவெறி, சாதி வெறி மூலம் சமூக  அமைதியை சீர்குலைக்கும் சதிகார கும்பல் இதுபோன்ற குற்றச் செயல்களை திட்டமிட்டுச் செய்து வருவதாக  அறிகிறோம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 95 ஆண்டுகளாக நாட்டின் விடுதலைக்கும், பின்னர் நாட்டின் பாதுகாப்பிற்கும்,  மக்களின் முன்னேற்றத்திற்கும் அரசியல் அமைப்புச்சட்ட எண்ணத்தில் நின்று செயல்பட்டு வருகின்ற கட்சி ஆகும்.  இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மூத்த அரசியல் கட்சி ஆகும். கட்சியின் அரசியல் கொள்கை வழி செயல்பாட்டை சகித்துக் கொள்ள முடியாத வெறுப்பு அரசியலை பரப்பி வருகிற சட்டவிரோத சமூக விரோத கும்பல் களால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது மரியாதையை சீர்குலைக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. மாநில தலைமை அலுவலகத்தை அவதூறு பரப்புரைக்காக பயன்படுத்திய குற்றவாளி குறித்து சென்னை பெருமாநகர காவல்துறை ஆணையர் அவர்களிடம் 17.07.2020 அன்று புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்யவும், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும் 22.07.2020 புதன் கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்று தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.

கட்சி உறுப்பினர்களும், அமைப்புகளும் தனி நபர் இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து ஊரடங்கு  உத்தரவுகளை அனுசரித்து ஆங்காங்கு கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது. சமூக விரோத சக்திகளுக்கு எதிராக நடைபெறும் ஜனநாயக போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்று  ஆதரிக்குமாறு அறைகூவி அழைக்கிறது. என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அழைப்பு விடுத்துள்ளார்.