ஊரடங்கு நெருக்கடிகளை சமாளிக்க குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி வழங்குக – இரா.முத்தரசன்

கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி நாடு முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டது. 70 நாட்கள் கடுமையான கட்டுபாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை குலைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் முதல் தேதியில் இருந்து தளர்த்தப்பட்ட நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற ஜூலை 31 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தொடர்பாக கண்காணித்து வரும் 19 உறுப்பினர்கள் கொண்ட மருத்துவக் குழு ஊரடங்கு தொடர்வது மட்டுமே கொரானா நோய் தொற்று பரவலை தடுக்க போதுமானதல்ல என கருத்து தெரிவித்துள்ளது. அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்வது, நோய் தொற்று உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. மருத்துவர் குழு ஆலோசனைகளை அரசு அலட்சியம் செய்யாமல் நடைமுறை படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவ பரிசோதனைகளை விரிவு படுத்த இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். ஜூலை மாதம் கொரானா நோய் பெருந்தொற்று தாக்குதலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சமாக உயரும் என எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் ஆய்வறிக்கை ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளது.

இந்த நெருக்கடியான கால கட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள், சிறு சிறு சுய வேலை செய்து வருவோர் என அனைத்துத் தரப்பினர் குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 5 ஆயிரம் உதவி நிதி வழங்க அரசு அக்கறையோடு முயற்சி எடுக்க வேண்டும். தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று அரசு அனுமதித்திருந்தாலும், பொதுப் போக்குவரத்து இயக்கம் இல்லாததால் தொழிலாளர்கள் வேலையிடம் வந்து செல்வதும், வேலையளிப்போர் உற்பத்திக்கான மூலப் பொருள்கள் வாங்குவதும் நடைமுறையில் மிகுந்த இடையூறுகளாக இருக்கின்றன. எனவே வேலையிழந்த தொழிலாளர்கள் வாழ்க்கை துயரங்கள் குறையவில்லை. மேலும் கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தீவிரமாகி வருவதால் ஏற்படும் அச்சம் காரணமாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே இந்த சோதனையாக காலத்தைமக்கள் நம்பிக்கையோடு கடந்து செல்ல குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி மற்றும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான உணவுப் பொருள்களும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. என்று இரா.முத்தரசன் கூறியுள்ளார்.