கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 20 கோடி நிதி உதவி

புதுதில்லி, ஜூலை 04, 2020. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 25ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 3 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. சமுதாயத்தில் பல தரப்பினரையும் பல விதங்களில் இந்த ஊரடங்கு பாதித்துள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அமைப்பு சாராத தொழிலாளர்களே ஆவர். பல்வேறு தொழில்களில் உதிரிகளாக ஈடுபட்டுள்ள இந்தத் தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் பணி நிரந்தரம், உறுதியான வருவாய், காப்பீடு, பணி பாதுகாப்பு போன்ற எந்தவிதமான அனுகூலங்களும் இருப்பதில்லை. அன்றன்று கிடைக்கும் வருவாய்தான் அவர்களது வாழ் வாதாரத்திற்கு அடிப்படையாக அமைகின்றது. ஊரடங்கால் எல்லா வேலைகளும் முடங்கிப் போன நிலையில் இந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் திண்டாடினர். ஊரடங்கின் பாதிப்பில் இருந்து ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்கள் விடுபடுவதற்கு மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் நிவாரணத் தொகுப்பை அறிவித்தது. அதில் கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அவர்களது நலவாரியத்தில் இருந்து உதவித் தொகை வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப பல்வேறு மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பலவிதங்களில் உதவி வருகின்றன.

தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக 17 நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள், ஓட்டுனர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள், சலவையாளர்கள், முடிதிருத்துவோர், தையல் கலைஞர்கள், கைவினைக் கலைஞர்கள், பனைமரத் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், காலணி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள், ஓவியர்கள், பொற்கொல்லர், மட்பாண்டம் செய்வோர், வீட்டு வேலை செய்வோர், விசைத்தறி தொழிலாளர்கள், நடைபாதை மற்றும் கடைகளில் பணிபுரிவோர், சமையல் தொழிலாளர்கள் ஆகியோருக்கு நலவாரியங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இந்த நலவாரியங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு தலா ரூ.2,000 கோவிட்-19 சிறப்பு நிதி உதவியாக வழங்கப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 17 நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 1,01,589 பயனாளிகளுக்கு தலா ரூ.2,000 வீதம் மொத்த உதவித்தொகையாக ரூ.20 கோடியே 31 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது என்று கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) திரு ம.ராஜசேகரன் தெரிவித்து உள்ளார். கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் நிதிஉதவி அவர்களது நலவாரியத்தின் நிதியத்தில் இருந்து வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழக அரசு உதவித் தொகையை வழங்கி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள்தான் 37,539 என்ற எண்ணிக்கையில் அதிக அளவில் நிதி உதவி பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து நடைபாதை மற்றும் கடைகளில் பணிபுரிவோர் 22,305 என்ற எண்ணிக்கையிலும் தையல் கலைஞர்கள் 14,720 என்ற எண்ணிக்கையிலும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் 10,217 என்ற எண்ணிக்கை யிலும் நிதியுதவி பெற்றுள்ளனர் என்று ராஜசேகரன் மேலும் தெரிவித்தார். உதவித் தொகையோடு கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் ஓட்டுனர்களுக்கும் தலா 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு மற்றும் 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகிய ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அந்த வகையில் 38,301 கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் 3,081 ஓட்டுனர்களுக்கும் என மொத்தமாக 41,382 பயனாளி களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன என்று தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் மேலும் தெரிவித்தார்.

இந்த நிதியுதவியைப் பெற்ற பயனாளிகள் சிலரோடு கலந்துரையாடினோம். தையல் கலைஞர் அன்பழகன், ஆட்டோ ஓட்டுனர் முத்தமிழன், தெருவோரம் பழச்சாறு கடை நடத்தும் கலைவாணி, செருப்பு பழுதுபார்க்கும்/தயாரிக்கும் பாபு மற்றும் முடி திருத்துநர் தனுசு ஆகிய ஐந்து பேருமே ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமத்துக்கு ஆளானதாகவும் தொழிலாளர் நலத்துறையின் இந்த ரூ.2,000 நிதி உதவி நெருக்கடி காலத்தில் மிகுந்த பயனளித்தது என்றும் தெரிவித்தனர். தக்க சமயத்தில் உதவிய அரசுக்கு நன்றியையும் தெரிவித்தனர்.