கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட நகராட்சி பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்புப் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் சுவாப் பரிசோதனை மேற்கொள்ளும் பணி மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு பணிகளை 01.08.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது சின்னமனூர் நகராட்சி துவக்கப்பள்ளி எர்ணம்பட்டி மற்றும் எரசக்கநாயக்கனூர் கம்பம் அண்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாம்களுக்கு வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆலோசனைகள் குறித்தும் நகராட்சிப் பகுதிக்குட்பட்ட 415 மற்றும் 17 ஆகிய வார்டுகளில் பொதுமக்களுக்கு சுவாப் பரிசோதனை மேற்கொள்ளும் பணி சின்னமனூர் கம்பம் நகராட்சிப்பகுதிகள் மற்றும் உத்தமபாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் கடைவீதி பேருந்து நிலையம் முக்கிய சாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சீரமைப்பு பணிகள் கம்பத்தில் குமுளி சாலையில் அத்தியாவசிய கடைகளுக்கு வருகை புரிகின்ற வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் சமூக இடைவெளியினை சரிவர கடைபிடிக்கப்பட்டு வருவது விதிமுறைகளை பின்பற்றுவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் தேவாரம் மற்றும் டி.ரெங்கநாதபுரம் ஆகியப்பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை துரிதபடுத்திட மருத்துவ அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். மஹாரஷ்டிரா மாநிலத்திலிருந்து சொந்த மாவட்டமான தேனி மாவட்டம் திரும்பியுள்ள முதியவர் திருப்பதி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அத்தியாவசிய பொருட்கள் வேண்டியும் மாதாந்திர உதவித் தொகை வழங்கிட வேண்டியும் கோரிக்கை வைத்ததை தெடர்ந்து மேற்கண்ட நபருக்கு உடனடியாக அத்தியாவசிய பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி அவருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கிட நடவடிக்கைகள் மேற் கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது. தமிழகத்தில் பல்வேறு பகுதி களில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளதால் கொரோனா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்திட அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்திலும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்திற்குள் வருபவர்களை எல்லைப் பகுதிகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருந்தபோதிலும் மாவட்டத்தின் சில பகுதிகளில் நோய்த் தொற்று பரவியுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஊராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேலும் நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கு அரசு அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கண்டறியப்பட்டு நடைமுறையில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமன்றி இதர அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வார்டுகள் வார்டுகளுக்குள் வீதி வாரியாக அதிகளவில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளவும் அப்பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு அறிகுறி தென்படுபவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒலிபெருக்கி துண்டு பிரசுரங்கள் ஆகியவைகளை வழங்கி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சரிவர வழங்கப்பட்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். இப்பணிகளை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொண்டு பொதுமக்களை பாதுத்திட வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வு களின் போது மகளிர் திட்ட அலுவலர் பா.சிவக்குமார் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட் சியர் (பொ) இ.கார்த்திகாயினி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஷ்ணு ராம் மேத்தி உதவி செயற்பொறியாளர் ராஜாராம் சின்னமனூர் நகராட்சி ஆணையாளர் சியாமளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.