கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதம் 70 சதத்தை நெருங்குகிறது இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது

புதுதில்லி, ஆகஸ்ட் 11, 2020: ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில், பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் கணிசமாக அதிகரித்து இன்று 70 விழுக்காட்டை நெருங்கியுள்ளது. நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனை யிலிருந்து வீடு திரும்புவது அதிகரித்திருப்பது, குறைவான தொற்றுள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது ஆகியவற்றின் காரணமாக குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15,83,489-ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47,746 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை 6,39,929 மட்டுமே. இது, கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 28.21 விழுக்காடுதான். இவர்கள், தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து சீராக அதிகரித்து வருவதால், கொவிட்-19 நோயாளிகளை விட, 9.5 லட்சம் பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர். கொவிட்-19 தொற்றால் இறப்பவர்களின் விகிதமும் உலக சராசரியைவிட இந்தியாவில் குறைவாக இருக்கிறது. இன்று இந்த இறப்பு விகிதம் இரண்டு விழுக்காடாகும்.