ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ஆளுநர் முயற்சி – கே.எஸ்.அழகிரி கண்டனம்

ராஜஸ்தான் மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்பதற்காக அந்த மாநில ஆளுநர் மூலமாக பா.ஜ.க. முயற்சி செய்கிறது. ராஜஸ்தானில் பா.ஜ.க. நிகழ்த்தி வரும் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு முன்பாக நாளை (27.07.2020) காலை 11 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர்கள் டாக்டர் கே. ஜெயக்குமார் எம்.பி, திரு எச்.வசந்தகுமார் எம்.பி, டாக்டர் கே. விஷ்ணுபிரசாத் எம்.பி மற்றும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு எம்.எஸ். திரவியம், திரு சிவ.ராஜசேகரன், திரு கே. வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பெருந்திரளாக பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.