கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு குதர்க்கம் செய்ய வேண்டாம் என இரா.முத்தரசன் கூறியுள்ளார்

கொரோனா எனும் கொடிய தொற்று கடந்த ஜனவரி முதல் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. மீள்வதற்கான போராட்டம் தொடர்கின்றது. அப்பாவி மக்கள், ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் அல்லல் படுகின்றனர்; அவதியுற்று வருகின்றனர். அவர்களது துயர் துடைத்திட
உதவிக்கரம்  நீட்டிட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், கொரோனாவின் தொற்றை வாய்ப்பாக பயன்படுத்தி, மத்திய அரசு தனது சொந்த கொள்கைகளை  நிறைவேற்றிட முயன்று வருவது கடும் கண்டனத்திற்குரியது. குறிப்பாக கொரோனாவின் காரணமாக அனைத்தும் முடங்கிய நிலையில் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பள்ளி நாட்களும், பாடங்களும் குறைத்திட வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தனக்கு மிக சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மிக முக்கிய பாடங்களை நீக்கியுள்ளது
உள்நோக்கம் கொண்டது. சிபிஎஸ்சி, பாடத்திட்டத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 30% அளவிற்கு பாடங்கள் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அவ்வாறு நீக்கப்படும் பாடங்கள் என்பது ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, பாலினம், மதம், சாதி, ஜனநாயகத்திற்கு எதிரான சவால்கள், முக்கியமான போராட்டங்கள், கூட்டாட்சி, குடியுரிமை தேசியம், அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு. சமூக இயக்கங்கள், பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவைகள் நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய நீக்கம் என்பது உள்நோக்க முடையது என்பது வெளிப்படையான ஒன்றாகும். அதே போன்று இடஒதுக்கீட்டிற்கு எதிராக பொருளாதார அளவு கோலை பின்வற்றுவது சமூக நீதிக் கொள்கைக்கு
எதிரான நடவடிக்கையாகும். எரிந்த வீட்டில் இழுத்தது லாபம் என்பது போன்று, மத்திய அரசு கொரோனாவைக் காரணணம் காட்டி தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களை, ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிறைவேற்றிட முயற்சிப்பதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன் இத்தகைய தவறான முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். என இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.