எனக்கு வர வேண்டிய சம்பளத்தைப் பல நிறுவனங்கள் தருவதில்லை – யோகிபாபு

வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில்,  இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில்,  மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”.  இப்படத்தில்  ஹரிஸ் பேரடி, வசந்தி, ஜாகிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில கலந்து கொண்ட யோகிபாபு பேசுகையில். “தயாரிப்பாளர் ஜாகிர் அலி மிகவும் கஷ்டப்பட்டு இப்படம் செய்துள்ளார், என்னால் இல்லை, அதற்கு வேறு பல காரணங்கள், ஆனால் படத்தை நன்றாக எடுத்துள்ளார். இயக்குநர் விநீஷ் சார் சொன்னது உண்மை தான். தீக்குளிக்கும் பச்சை மரம் 2013ல் நடித்தேன், 1000 ரூபாய் சம்பளம். மீண்டும் பல வருடம் கழித்து போன் செய்து அவர் பேசியவுடனே சொல்லுங்கள் விநீஷ் சார் என்றவுடன் ஆச்சரியப்பட்டார். நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன். நான் எல்லோருக்கும் சப்போர்ட் செய்து தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் உதவியாளராக இருந்தவர் ஹீரோவாக நடித்தார் அந்தப்படத்தில் ஒரு நாள் நடித்தேன், அந்தப்படத்திற்குத் தான் 7 லட்சம் கேட்டேன் எனப் புகார் சொல்லியுள்ளார்கள். இது நான் நடித்த படம் அதனால் நான் வரவேண்டும், வந்துள்ளேன்.  நான் என் சம்பளத்தை, நிர்ணயிப்பதில்லை, ஆனால் எனக்குச் சொன்ன சம்பளம் வருவதே இல்லை. எனக்கு வர வேண்டிய சம்பளம் மிகப்பெரிய லிஸ்ட் இருக்கிறது, அதனால் யாரும் தவறாகப் பேசாதீர்கள். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்*******

தயாரிப்பாளர் ஜாகிர் அலி பேசியதாவது… நான் ஒரு மலையாளி, தமிழ் மீதான நம்பிக்கையில், யோகிபாபு மீதான அன்பில், இப்படத்தை எடுத்துள்ளோம். நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். யோகிபாபு இப்படத்திற்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். இப்படம் மே 16 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் விநீஷ் மில்லினியம் பேசியதாவது… நான் கொஞ்சம் மலையாளி, மலையாளத்தின் தாய்மொழி தமிழ் தான். 2013 ல் புதுமுகங்களின் முயற்சியில் தீக்குளிக்கும் பச்சை மரம் படம் எடுத்தேன் பலருக்குத் தெரிந்திருக்கும்.  அப்போது என்னிடம் 400 பேர் நடிக்கக் கேட்டு வந்தார்கள், அப்போது ஒருவர் என்னிடம் வந்திருந்தார், அவருக்கு ஒரு நாள் 1000 ரூபாய் சம்பளம் பேசி 25 நாள் நடிக்கச் சொன்னேன், ஆனால் நான் நிறையப் படம் நடித்துள்ளேன், எனக்கு 2000 சம்பளம் தாருங்கள் என்றார், ஆனால் நான் நடிக்க விருப்பமிருந்தால் நடி இல்லையென்றால் ஓடிவிடு என்றேன். அவர் தான் யோகிபாபு. ஆனால் சில வருடம் கழித்து நான் போன் செய்த போது, அன்போடு என்னை அழைத்துப் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  நான் படம் செய்யப்போகிறேன் என்று சொன்ன போது, கதையெல்லாம் சொல்ல வேண்டாம், உங்களுக்காக நடிக்கிறேன் எனச் சொன்னார். அவருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப்படம் கண்டிப்பாக அவரது நடிப்பில் மிக வித்தியாசமான படமாக இருக்கும்.  மது அம்பாட் சார் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவார், இப்போது சொன்னாலும் மலை ஏறுவார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர் என் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எனக்குத் தமிழில் முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர் தாணு சாருக்கு நன்றி. தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. என்றார்.

கலைப்புலி தாணு பேசியதாவது…  இப்படத்தின் டிரெய்லர் பாடல்களை முன்பே பார்த்து விட்டேன்.  நண்பர் தயாரிப்பாளர் ஜாகிர் அலியை வரவேற்கிறேன். யோகிபாபு எல்லோருக்கும் நல்லவராகத் தான் இருக்கிறார். நான் போன் செய்தபோது, ஒரு தயாரிப்பாளருக்குப் பணமே வாங்காமல் நடித்துத் தந்தார். அவரது பெயருக்குக் களங்கம் வரக்கூடாது. இந்தப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.