கஞ்சா கடத்தல் நபரை கைது செய்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய ஆணையர்

செங்குன்றம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையின் போது லோடு வாகனத்தில் கஞ்சா ஏற்றி வந்த 2 நபர்களை கைது செய்து 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். C-5 கொத்தவால்சாவடி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் R.அன்பரசன், C-5 கொத்தவால்சாவடி காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் தனசேகர், B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய தலைமைக் காவலர்கள் D.பழனிக்குமார் (த.கா. 43753) C.ரீகன் ஜோஷ் (த.கா.40139) ஆகியோர் 13.07.2020 அன்று அதிகாலை 2.00 மணியளவில் M-4 செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட M.A நகர் சோதனை சாவடியில் பணியிலிருந்த போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த TN 05 BU 3859 பதிவெண் கொண்ட Ashok Leyland சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, வாகனத்தில் வந்த இரண்டு நபர்களும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் வாகனத்தை சோதனை செய்த போது வெங்காய மூட்டைகளுக்கு இடையில் 21 பிளாஸ்டிக் பைகளில் கஞ்சாவை பதுக்கி வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அதன் பேரில் 2 நபர்களையும் கைது செய்து M-4 செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

M-4 செங்குன்றம் காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.ஞானராஜ், ஆ/23, த/பெ.முருகன் No.19/9, ரமணா நகர், கெளதமபுரம், பெரம்பூர் 2.புருஷோத்தமன், ஆ/22, த/பெ. பாபு No.8, NV நடராஜர் தெரு, கொடுங்கையூர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 42 கிலோ கஞ்சா மற்றும் Ashok Leyland வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட ஞானராஜ் தனது நண்பரான புருஷோத்தமன் என்பவரை அழைத்து கொண்டு ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகிலுள்ள ராஜமுந்திரி பகுதிக்கு சென்று அங்கு 42 கிலோ கஞ்சாவை வாங்கி சென்னைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

பணியின் போது விழிப்புடன் செயல் பட்டு கஞ்சா கடத்தி வந்த 2 நபர்களை கைது செய்து 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த C-5 கொத்தவால்சாவடி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் R.அன்பரசன், C-5 கொத்தவால்சாவடி காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் தனசேகர், B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய தலைமைக் காவலர்கள் D.பழனிக்குமார், (த.கா. 43753) C.ரீகன் ஜோஷ், (த.கா 40139) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப 13.7.2020 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.