நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து மாணவர்களின் கவலையை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி வேண்டுகோள்

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் நடக்கும் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களின் கவலையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவைக் கடந்த திங்களன்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மாணவர்களின் ஓராண்டை வீணாக்கக் கூடாது என்றும் தேர்வுகளை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டிருந்தனர். இதனால் செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇஅட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் (யுஜி) நுழைவுத் தேர்வும் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு அமைப்பு (என்டிஏ) தெரிவித்துவிட்டது. இதற்கிடையே பாஜக மூத்த தலைவரும் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கரோனா காலத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்வதில் சிக்கல் ஏற்படும். ஆதலால், ஜேஇஇ, நீட் நுழைவுத் தேர்வுகளை தீபாவளிப்பண்டிகை முடிந்து நடத்துங்கள் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி ட்விட்டரில் விடுத்த கோரிக்கையில் “ கரோனா வைரஸ் காலத்தில் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க மாணவர்கள் பெற்றோர் தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. அவர்களின் கவலைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். விரைவாக அனை வரும் ஏற்கும் வகையில் ஒரு தீர்வை அறிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் விடுத்த செய்தியில் “ நாட்டில் கரோனா வைரஸ் பரவல் சூழல் இன்னும் இயல்புக்கு வரவில்லை. இந்த சூழலில், ஜேஇஇ, நீட் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் குறித்து அவர்கள் பெற்றோர்கள் கவலையும், அச்சமும் தெரிவிக்கிறார்கள். இந்த கவலையை மத்திய அரசும், தேர்வுகள் நடத்தும் துறையும் கருத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.