விண்வெளி அறிவியல், நாட்டைக் கட்டமைப்பதில் டாக்டர் கஸ்தூரிரங்கனின் பங்களிப்புகளுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் புகழஞ்சலி

அனைவராலும் அன்புடன் நினைவு கூரப்படும் பேராசிரியர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் அல்லது டாக்டர் கஸ்தூரிரங்கன், ஒரு சிறந்த தலைவராகவும் திறன் வாய்ந்த விஞ்ஞானியாகவும் தேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவராகவும் விளங்கியவர். நாட்டின் விண்வெளித் திட்டங்கள், கல்வி கட்டமைப்பை வலுவாக வடிவமைத்ததுடன் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையையும் கொண்டவராகவும் திகழ்ந்தார். வளமான சிந்தனை கொண்டவராகவும் நாட்டின் முன்னேற்றத்திற்கான பாதையை தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவராகவும் இருந்தார். அவரது வாழ்வியல் பயணம், ஒரு நீடித்த சகாப்தத்தை விட்டுச் சென்றுள்ளது என இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பேராசிரியர் கஸ்தூரிரங்கன் கல்வியில் சிறந்து விளங்கியதுடன் பம்பாய் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில் உயர் ஆற்றல் சோதனை படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். விண்வெளி ஆய்வில் அவரது அசாதாரணமான பங்களிப்புகள் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. அகமதாபாதில் அவர் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் பணிபுரிந்தபோது 1971-ம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் (தற்போது யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம்) பணியாற்றிய காலத்தில், இந்தியாவின் முதல் இரண்டு சோதனை புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள்களான பாஸ்கரா-I & II திட்டங்களின் இயக்குநராகவும் பணியாற்றினார். நாட்டின் ரிமோட் சென்சிங் திட்டத்தின் விரிவாக்க நடவடிக்கைகளிலும் அவரது பங்களிப்பு இருந்தது. அவரது பதவிக் காலத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஐஆர்எஸ்-1-சி மற்றும் ஐஆர்எஸ் -1-டி போன்ற செயற்கைக்கோள்கள் விவசாயம், வனம், நீர் வளம், நகர்ப்புற திட்டமிடல் போன்ற துறைகளில் உயர் தெளிவுத்திறன் கொண்ட தரவுகளை வழங்க உதவியது. அவரது தொலைநோக்குப் பார்வை மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவியது. விண்வெளி அறிவியல் மக்களுக்கு நேரடியாக எவ்வாறு பயனளிக்கும் என்பதை நிரூபித்தன. 1990 மற்றும் 2000 ஆண்டுகளின் முற்பகுதியில், விண்வெளி நடவடிக்கைகளின் உலகளாவிய முன்னெடுப்புகளை உருவாக்குவதிலும் வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தது. 20 ஆண்டுகள் இஸ்ரோவின் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் பணியாற்றினார். இறுதியாக 1990-1994 காலகட்டத்தில் அந்த மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றிய அவர், அனைத்து செயற்கைக்கோள்கள், அவற்றின் துணை அமைப்புகளுக்கான வடிவமைப்பு, புனைவு, தகுதி மற்றும் ஒருங்கிணைப்பு முறைகள் மற்றும் அமைப்புகளை நிறுவுவதற்கான முதன்மை பொறுப்பையும் வகித்தார்.

இஸ்ரோவுடனான அவரது நீண்டகால பயணம் 1994 முதல் 2003-ம் ஆண்டு வரை விண்வெளித் துறையின் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்ற வைத்தது. இந்த சகாப்தம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அவரது நுண்ணறிவு வழிகாட்டுதலின் கீழ் பல முக்கிய பணிகளையும் மேற்கொண்டது. தகவல் தொடர்பு மற்றும் வானிலை அறிவியலுக்கான இந்திய தேசிய செயற்கைக்கோள் (இன்சாட்), புவி கண்காணிப்புக்கான ஐஆர்எஸ் போன்ற முக்கிய செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக உருவாக்கி விண்ணில் செலுத்துவதற்கு அவர் தலைமை தாங்கினார். அவரது தலைமையில் பிஎஸ்எல்வி-யின் வெற்றிகரமான செயல்பாட்டையும், ஜிஎஸ்எல்வி-யின் சோதனையும் நடைபெற்றது. குறிப்பாக, முதன் முதலாக நிலவைப் பற்றிய ஆராய்ச்சிக்கான சந்திரயான் -1, அவரது தலைமையின் போது வடிவமைக்கப்பட்டது. சந்திரனில் ஆய்வு செய்வதற்கான திட்டங்கள் விண்வெளி அறிவியல் துறையில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தது. உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் அவரது அர்ப்பணிப்பு நாட்டின் வளர்ந்து வரும் தற்சார்பு
நிலையை உறுதி செய்வதாக அமைந்தது. ஒரு வானியல் ஆய்வாளராக டாக்டர். கஸ்தூரிரங்கனின் ஆர்வம் உயர் ஆற்றல் கொண்ட எக்ஸ்ரே மற்றும் காமா கதிர் ஆராய்ச்சித் துறைகளிலும் அடங்கும். விண்வெளித்துறையில் அவரது மகத்தான சாதனைகளைக் கடந்து, பேராசிரியர் கஸ்தூரிரங்கனின் தொலைநோக்குப் பார்வை கல்வித் துறையிலும் விரிவடைந்தது. நாட்டின் கல்வி முறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் தேசிய கல்விக் கொள்கை (2020)-ஐ வடிவமைக்கும் குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார். முழுமையான வளர்ச்சி, விமர்சன சிந்தனை, பல்துறை கற்றல், தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் தேசிய கல்விக் கொள்கை 2020 வடிவமைக்கப்பட்டது. இது மாணவர்கள், மற்றும் நாட்டில் வளர்ந்து வரும் தேவைகள் குறித்த அவரது ஆழ்ந்த புரிதலை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தக் கொள்கையை வடிவமைப்பதில் அவரது தலைமைத்துவம், இளம் தலைமுறையினரின் சிந்தனைகளை மேம்படுத்தும் நோக்கில் அமைந்தது. தொடக்கக்கால குழந்தை பருவ கல்வி, அடிப்படை கல்வி, எண்ணறிவு, உயர் கல்வியில் பல்வேறு துறைகளில் கற்பதற்கான வாய்ப்புகளுக்கு சான்றாக இந்த தேசியக் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. நாட்டின் கல்வி, அறிவியல் கொள்கைகளை வடிவமைப்பதில் டாக்டர் கஸ்தூரி ரங்கன் முக்கியப் பங்கு வகித்தார். தேசிய கல்விக் கொள்கை 2020-ல் வரைவு குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார். இந்தக் கொள்கை நாட்டின் கல்வி முறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திட்டக் குழுவின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றினார். இந்தியாவின் மொத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் 12-வது ஐந்தாண்டு
திட்டத்தை வகுப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். அவரது தலைமையிலான குழு மேற்குத் தொடர்ச்சி மலைக்கான உயர்மட்ட பணிக்குழுவின் தலைமைப் பொறுப்பேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.

அறிவியல், தொழில்நுட்பம், கல்வி போன்ற துறைகளைத் தவிர, புதுமை, சமூக முன்னேற்றத்துக்கான கொள்கைகளுக்காகவும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பல்வேறு துறைகளில் கொள்கைகளை வடிவமைப்பதில் அவரது நுண்ணறிவு, துறை சார்ந்த நிபுணத்துவம் போன்றவை நாட்டின் முன்னேற்றத்திற்கான வலுவான அடித்தளம் அமைக்க உதவியது. அவரது அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவைகள், சாதனைகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டன. நாட்டின் பாரம்பரியத்தில், மிகச் சிறந்த மனிதர்களால் விதைக்கப்படும் விதைகள் வலிமையான மரங்களாக வளர்ந்து, எதிர்கால தலைமுறையினருக்கு சிறப்பான வாழ்வாதாரத்தையும் வழங்குகின்றன. விண்வெளி, கல்வி போன்ற துறைகளில் பேராசிரியர் கஸ்தூரிரங்கனின் தொலைநோக்குப் பார்வை எண்ணற்ற நபர்களை அறிவியல் மீதான ஆர்வத்தையும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற உணர்வுக்கும் தூண்டுகோலாக அமைந்துள்ளது. ஒரு வலுவான, வளமான தேசத்தை உருவாக்கும் வகையில் அவரது தன்னலமற்ற, இடைவிடாத கடின உழைப்பின் மூலம் கிடைத்துள்ள உத்வேகத்தை நாம் கௌரவிப்போம் என இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் தெரிவித்துள்ளார்.