செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் குறைதீர் கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 210 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இதில், குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா, கலைஞர் கனவு இல்லம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடு, தகன மேடை வேண்டியும், பல்வேறு கோரிக்கை மனுக்கள் அமைச்சரிடம் அளிக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகைபுரிய இருப்பதால் வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகர்ப்புறத்தை ஒட்டிய பகுதிகளில் பட்டாக்களை உடனடியாக வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மேலும், முதலமைச்சர் வருகை தரும் போது 30,000த்திற்க்கும் அதிகமான பட்டாக்கள் வழங்க வேண்டி இருப்பதால் மற்ற பகுதிகளிலும் பட்டா வழங்குவதற்கான பணிகளை வருவாய் துறையினர் விரைவாக மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். மேலும், இக்குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் ஒரு அதிகாரியை நியமித்து பராமரிக்கப்பட வேண்டுமென்றும், எவ்வளவு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றும், நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களுக்கான காரணங்களையும் தனக்கு தெரிவிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். நிதிப்பற்றாக்குறை இருப்பதாக தெரிந்தால் தனக்கு தெரியப்படுத்த வேண்டுமென்றும் அதற்கான நிதியினை உடனடியாக பெற்று தருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், கீரப்பாக்கம் திட்டப்பகுதியில் தேர்வு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு ரூ.3.60 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் வழங்கினார்கள்.
இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.ச.நாராயண சர்மா,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவர் ம.கணேஷ் குமார், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் மு.பாபு, செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காஜா சாகுல் அமீது, செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.