ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தருண் விஜய், பேசும்போது, சினிமா துறையில் இதுதான் என்னுடைய முதல் படம். என்னுடைய அம்மா, அப்பா ஆதரவு இல்லாமல் நான் கதாநாயகனாக ஆக முடியாது. அவர்களுக்கு நன்றி! இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் என்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். பொறுமையாக தொடங்கும் படம் போகப்போக பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும். என்றார்.********
இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங், ” கதை சொல்ல போன முதல் நாளில் இருந்து தற்போது இந்த விழா சிறப்பாக நடப்பது வரை அதற்கு முதல் காரணம் கார்த்திகேயன் சார். தருணுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. கொரிலாவாக நடிக்க கடுமையான பயிற்சி எடுத்தார். நடிகர்கள் சேஷ்விதா, பிரியதர்ஷினி, நிழல்கள் ரவி, தினேஷ் என எல்லாருமே சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள். இது திரில்லர் படமாக இருந்தாலும் நிறைய எமோஷன் உள்ளது. படம் முடிந்து வரும் பொழுது ‘குட்’டாக ஃபீல் செய்வீர்கள். என்னுடைய அண்ணன், அண்ணி, என்னுடைய மனைவி எல்லோருக்கும் நன்றி”.
இயக்குநர் பேரரசு, ” வழக்கமாக தந்தை தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பொழுது கலர் கலரான காஸ்டியூம், அறிமுக பாடல் என்றுதான் அழகு பார்ப்பார். ஆனால், இப்படி ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் கார்த்திகேயன். திரில்லர் படத்தில் அந்த த்ரில்லை பார்வையாளர்களுக்கு கடத்துவது சாதாரண விஷயமில்லை. அது ‘குற்றம் புதிது’ படத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட். அதனால், இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் இரண்டு படங்கள் ஹிட் படங்கள் பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைத்தால் அதிலும் நடித்து விடுங்கள். விமர்சனங்களை நம்பாமல் எல்லா படங்களையும் மக்கள் நீங்கள் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்”.
நடிகை சேஷ்விதா கனிமொழி, “நான் நடிக்க கமிட் ஆன முதல் படம் ‘குற்றம் புதிது’. எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தருணுக்கு ஆல் தி பெஸ்ட். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி! ஹீரோயின் ஆனால் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், பயமும் நிறைய இருக்கிறது. நான் நடித்த முந்திய இரண்டு படங்களுக்கு ஆதரவு கொடுத்த மீடியா மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. அதேபோன்ற அன்பும் ஆதரவும் இந்தப் படத்திற்கும் தேவை” என்றார்.