“கசிவு” திரைப்படம் குறித்து நெகிழ்ந்த எம்.எஸ்.பாஸ்கர்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய “கசிவு” என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது. எம்.எஸ் பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்க விஜயலட்சுமி, ஹலோ கந்தசாமி  நடித்துள்ளனர். இந்த படத்தை  வரதன் செண்பகவல்லி இயக்கியுள்ளார். வெற்றிச்செல்வன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.  இந்த படம் அக்-23 இரவு முதல் ஓடிடி பிளஸ் தளத்தில் வெளியாகிறது. இதுகுறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசியதாவது: “கரிசல் எழுத்தாளர்கள் என்றால் கி.ராஜநாராயணன், பூமணி இவர்கள்தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். என்னிடம் பூமணியின் இந்த கசிவு நாவலில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் வரதன் சொன்னபோது, அதனாலேயே உடனே ஒப்புக்கொண்டேன். இந்த படப்பிடிப்பு நடைபெற்ற கிராமம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் கொஞ்சம் நேரம் கிடைத்தபோது மாட்டு கொட்டகையில் சிறிது நேரம் படுத்து தூங்கினேன்.என்னைப் பொறுத்தவரை ஆதாயத்துக்காகவும் நடிக்கணும்.. ஆத்ம திருப்திக்காகவும் நடிக்கணும்.. கசிவு திரைப்படம் அப்படி ஆத்ம திருப்திக்காக நடித்த படம் தான்.******

சொர்க்கம், நரகம் என்பது நாம் இறந்த பின்னால்தான் என்பது இல்லை. இங்கேயே இருக்கிறது. நாம் செய்த தப்பு கடைசி வரை உறுத்திக் கொண்டே இருக்கும். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட படம் பார்ப்பதால் எல்லோரும் திருந்தி விட முடியாது. காரணம் எவ்வளவோ சட்ட திட்டங்கள் வந்துவிட்டாலும் முன்பை விட இப்போது குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. எனக்கு இதுபோல நல்ல நல்ல கதாபாத்திரங்களாக தாருங்கள். என் நடிப்பை இன்னும் நான் மெருகேற்றிக் கொள்கிறேன். எழுத்தாளர் பூமணி ஐயாவின் எழுத்துக்களை பேசி நடித்ததே எனக்கு இன்னொரு தேசிய விருது கிடைத்தது போல தான்” என்று கூறினார்.

இயக்குநர் வரதன் பேசும்போது,* “கசிவு படத்தை நான் இயக்கினேன் என்று சொல்வதை விட கசிவு தான் என்னை இயக்கியது. எழுத்தாளர் பூமணி ஐயாவை சந்தித்தபோது என்னிடம் மூன்று சிறுகதைகளை கொடுத்தார். நானும் அவரை போலவே கரிசல்காரன் தான். அவர் கொடுத்த கதைகளை குறும்படங்களாக இயக்க வேண்டாம் ஆந்தாலஜி படமாக இயக்கலாம் என்று தான் முதலில் முடிவு செய்தோம். ஆனால் அது சரி வராததால் அந்த மூன்றில் இருந்து கசிவு நாவலை தேர்ந்தெடுத்து முதலில் படமாக இயக்கியிருக்கிறோம். நன்செய், புன்செய் என்பது போல பூமணி ஐயா எழுதிய நான்கு கதைகளை கருஞ்செய் கதைகள் என்கிற பெயரில் தொகுத்து அதில் இது முதல் படமாக வெளியாகி இருக்கிறது என்று சொல்லலாம். மலையாளத்தில் எம்டி வாசுதேவன் நாயர் கதைகள் மனோரதம் என்கிற பெயரில் மிகப்பெரிய பட்ஜெட்டில், பெரிய நட்சத்திரங்கள் நடித்து வெளியானது. இங்கே அதுபோன்ற சூழல் தற்போது இல்லை. பொன்னாண்டி கதாபாத்திரத்திற்கு நான் யோசித்து வைத்திருந்ததைப் போலவே பூமணி ஐயாவும் எம்.எஸ் பாஸ்கரை தான் நினைத்து வைத்திருந்தார். இந்த கசிவு படப்பிடிப்பு தளத்தில் பூமணி ஐயா ஒரு பிக்பாஸ் மாதிரி படப்பிடிப்பை மானிட்டர் பண்ணிக்கொண்டே இருந்தார். எம்.எஸ் பாஸ்கரின் ஒத்துழைப்பும் ஈடுபாடும் இருந்ததால் தான் இந்த படத்தை ஏழே நாளில் எடுத்து முடித்தோம்” என்று கூறினார்.

*தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்*  தயாரிப்பு ; வெற்றிச்செல்வன் கதை, வசனம் ; சாகித்ய அகாடாமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி இயக்கம் ; வரதன் செண்பகவல்லி இசை ; ஜெயா K தாஸ்  ஒளிப்பதிவு ; முருகன். G படத்தொகுப்பு ; தமிழ்குமரன். M பாடகர் ; கிருஷ்ணராஜ் மக்கள் தொடர்பு ; KSK செல்வா