*பினாங்கு இந்தியர் நிலை* *ஐயோ ! ஐயோ ! இதுதானா !?*


தீவாம்
*பினாங்கில்* இந்தியருள்

      தினமும் பெரும்பா லானவர்கள்

*சேவா* கட்ட முடியாமல்

        திணறிக் கொண்டே அழுகின்றார் !

சாவா திருக்க வேண்டி,அவர்

      சாப்பா டின்றித் தவிப்பதனைக்

கூவாச் சேவல் போல்நாளும்

    குமுறு கின்றார் உள்ளத்துள் !

*பட்டினி* கிடத்தல் ஒருபக்கம் !

     *படிக்க* வாய்ப்பிலை மறுபக்கம் !

சட்டென இவற்றைத் தீர்ப்பதற்கே

      தலைவர்கள் எவரும் வரவிலையாம் !

கெட்டித் தனமாய் வாக்குகளும்

      கிடைப்ப தற்காய் முன்வருவோர்

பட்டினிப் பிள்ளைகள் பசிபோக்க

     பக்கம் வரவே பார்க்கலையாம் !

தீர்வை இல்லாத் தீவாகத்

      தெரிந்தோர் பினாங்கைச் சொல்வார்கள் !

ஆர்வத் துடனே அந்நாளில்

      ஆங்கே சென்று பொருள்வாங்கப்

பார்த்த வர்களுள் நானொருவன் !

      பகர்கின் றாரே இன்(று) ஐயோ

தீர்த்தே குறையை மக்களுக்கே

     தினமும் மகிழ்ச்சி தருவர்,இலை !

இருப தாவது நூற்றாண்டில்

       இந்தியர் இங்கே வாழ்ந்தநிலை

இருபத் தோராம் நூற்றாண்டில்

      இன்னும் தொடர்வதைப் பார்த்திடவே

இருண்டே கண்கள் இரண்டிலுமே

       இரத்தம் வடியப் பார்க்கிறதே !

*கருவா யி* ருந்து வெளிவந்த

          காலத் திருந்தே கதி,இதுவா ?

வாக்குப் போடப் போகுமுனே

      வறுமை எதுவும் நெருங்கவிடா

வாக்குக் கேட்போர் செயல்திறனை

     மனத்துள் நன்றாய் ஆய்ந்தபினே

வாக்கைப் போடும் இந்தியர்காள்

     மகிழ்ந்தே  நல்லார்க்(கு) அளித்திடும்நல்

நோக்கம் நெஞ்சில் வைத்துவிட்டால்

       நூறு துயரமும் தீர்ந்திடுமே !

                                        *பாதாசன்*

*அருஞ்சொல் விளக்கம் :-*

1.சேவா ( மலாய்) : வாடகை

2தீர்வை இல்லா : வரி இல்லாத