தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டு விழா நடந்தது. இவ்விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன், பூச்சி.எஸ்.முருகன் (தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் மற்றும் நடிகர் சங்க துணைத் தலைவர்) மற்றும் நா.இளங்கோவன், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகை ரேகா, தயாரிப்பாளர் கே.சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.******
விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில்‘, முதல்வர், துணைமுதல்வர் ஆகியோருக்கு நன்றியும், வணக்கமும். அண்ணன் சகோதரர் பூச்சிமுருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றார். அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன்.அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் உள்ளத்தில் தனிஇடம் பெற்றுருக்கிறார். அவர் ஒரு மாமனிதர்.அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், ஏன் நான் கூட அவர் அனுமதியுடன் அறிவாலயம் செல்ல முடியும். அவர் அனுமதியுடன்தான் கட்சி தலைவரை சந்திப்பேன். அங்கே எங்களை நன்கு உபசரிப்பார். அப்படிப்பட்ட பொறுப்பில் இருக்கிறார். இந்த பத்திரிக்கை சங்கத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருக்கிறார். உள்ளாட்சி அமைப்புக்கு 2 முறை,சட்டசபைக்கு 4 முறை, பார்லிமென்ட்டுக்கு ஒருமுறை என மொத்தம் ஏழு முறை தேர்தலில் நான் வெற்றி பெற்றுள்ளேன்., 26 வயதில் தொடங்கி, பூச்சி முருகன் அண்ணனுடன் 35 ஆண்டு காலத்திற்கு மேலாக பணியாற்றியுள்ளேன். போட்டி இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கணும். நிலவில் துணிச்சலாக, முதலில் களம் இறங்கியதால் ஆம்ஸ்ட்ராங் வரலாற்றில் இடம் பிடித்தார். வாழ்க்கையில் முன்னேற துணிச்சல், லட்சியம் வேண்டும். கடுமையான உழைப்பு வேண்டும். அவரே வெற்றியாளனாக மாறுகிறார்’ என்றார். மேலும் குடும்ப உறுப்பினர்களை மதிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, தனது தீபாவளி, சின்ன வயது குடும்ப அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார்.
பூச்சி.எஸ்.முருகன் பேசுகையில் ‘‘எப்போதும் சினிமா பத்திரிகையாளர் நலனுக்காக, அவர்கள் உதவிக்காக மட்டுமே தன்னை சங்க தலைவி கவிதா தொடர்பு கொண்டு பேசுவார், தன்னால் முடிந்த உதவிகளை சங்கத்துக்கு செய்வேன் என்றார். மேலும், பூச்சி முருகன் என்ற பெயர் எப்படி வந்தது. அது நாடகத்தில் நடித்ததால் வந்தது. நான் நாடக நடிகராக கலைமாமணி வாங்கி இருக்கிறேன் என்று உற்சாகமாக பேசினார். மேலும், நடிகர் சங்க துணைத்தலைவராக நடிகர்கள் குறித்து மேடையில் கவனமாக பேச வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். சங்க தலைவி வைத்த கோரிக்கைகளுக்கு தகுந்த ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்
ஆவடி அசிஸ்டென்ட் கமிஷனர் நா.இளங்கோவன் அடுக்கு மொழியில் அழகாக பேசினார். தனது பணி அனுபவம், மேடை பேச்சு அனுபவம் குறித்து தன்னம்பிக்கையாக பேசினார். செல்போன் பாதிப்பு எப்படி இருக்கிறது என்று விவரித்தார். செல்போனை கண்டுபிடித்தது யார் தெரியுமா என்று கேட்டு அரங்கை அதிர வைத்தார். தீபாவளி குறித்து கருணை, பாசம் என பல விஷயங்களை அழுத்தமாக சொன்னார்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசுகையில் ‘‘தனது சினிமா அனுபவங்களை விவரித்தார். தனது வாழ்க்கையில் பத்திரிகைகள், பத்திரியாளர்கள் தாக்கம் குறித்தும் சொன்னார். மது பழக்கம் கூடாது என்பது குறித்தும், தனது குறித்து நல்ல செய்திகளை வெளியிட்ட தினந்தந்தி முன்னாள் நிருபர் கங்காதரன் நட்பு குறித்தும் அழகாக பேசினார்.
விழாவில் கடலோர கவிதைகள் ரேகா பேசியபோது ‘‘ சினிமாவில் நிறைய படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். நம் நினைவுகளை திரும்பி பார்க்க வைப்பது, நாம் நடித்த படங்களின் போட்டோக்களும், அந்த படங்கள் குறித்து பத்திரிகையில் வந்த செய்திகளும் தான். இப்போது யூட்யூப் சோஷியல் மீடியா வந்துவிட்டது. ஆனாலும், ஆனந்தவிகடன், ராணி, குமுதம், தினத்தந்தி, தினமலரில் வந்த செய்திகளை, போட்டோவை மறக்க முடியுமா? அதை பொக்கிஷமாக வைத்து இருக்கிறேன். இந்த தீபாவளியை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார். மேலும் புன்னகைமன்னன் பட நிகழ்வு, அந்த முத்தக்காட்சி குறித்து பல தகவல்களை சொன்னார். அந்த வயது விபரமில்லாத வயது , என் அப்பா வருத்தபடுவார் என்று பயந்தேன் என்றார்..
விழாவில் சங்க தலைவர் எஸ்.கவிதா சினிமா பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் தேவை என்பது குறித்து விழாவில் வேண்டுகோள் விடுத்தார். மேலும், சங்க மலருக்கு விளம்பர உதவிகள் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். விழா நிகழ்ச்சிகளை விஜய் டிவி புகழ் அமுதவாணன் நகைச்சுவையாக தொகுத்து வழங்கினார். சங்க செயலாளர் கோடங்கி ஆபிரகாம் வரவேற்பு உரை ஆற்றினார். விழா முடிவில் சங்க உறுப்பினர்களுக்கு இனிப்பு, தீபாவளி பொருட்கள், புத்தாடை அடங்கிய 8 பொருட்கள் தீபாவளி பரிசுடன், சிறு தொகையும் வழங்கப்பட்டன. விழா முடிந்து, அமைச்சர் உட்பட அனைவரும் பெரு மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் சென்றனர்