‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் இசை மற்றும் காணொளிக்காட்சி வெளியீடு

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் காணொளி  வெளியாவதற்கு முன்பு எனது தம்பி ருத்ராவை இங்கு நடிகராக அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ருத்ரா எனது பெரியப்பா மகன் எனது சொந்தத் தம்பி இல்லை. அப்பா – பெரியப்பா இருவரும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் அவர்களுக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு. படத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு அதில் முதல் பாதி ஒருவரும், இரண்டாம் பாதி இன்னொருவரும் பார்த்துவிட்டு படம் முடிந்த பிறகு இருவரும் மாற்றி மாற்றி கதை சொல்லி கொள்வார்கள். அப்படியான சினிமா பைத்தியம் அவர்கள். இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள். பிறகு எனது பெரியப்பாவிற்கு படிப்பு வரவில்லை. அதனால் அவர் வேலைக்கு சென்று எனது அப்பாவை படிக்க வைத்து ஐபிஎஸ் ஆக்கினார். அவருடைய பையன் தான் ருத்ரா. ருத்ராவுக்கு நான் செய்ய வேண்டிய கடமை எப்படிப்பட்டது என்பது இந்த கதை மூலம் உங்களுக்கு புரிந்திருக்கும். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதை அவர்தான் ஃபோர்ஸ் செய்தார். இன்று இந்த மேடையில் நான் இருக்க காரணமே அவர்தான். அப்படி என்றால் ருத்ராவை எந்த அளவுக்கு அவர் சொல்லி வளர்த்திருப்பார் என்று பாருங்கள். நிச்சயம் உங்கள் ஆதரவு எங்கள் குடும்பத்திற்கு வேண்டும்” என்றார்.*******

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார், “நடிகனாக ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது இயக்குநர் ஆனது வரை என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. நான் நடிகனாக இருந்த பொழுது நான் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், இயக்குநரான பின்பு என்னுடைய படம் தான் பேச வேண்டும். நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை ஜூலை 11 அன்று திரையரங்குகளில் பாருங்கள். பொதுவாக, இயக்குநர் தான் நடிகருக்கு கதை சொல்வார்கள். ஆனால், எனக்கு இங்கு ருத்ரா தான் கதை சொன்னார்.  ஒரு நடிகராக தன்னை சிறப்பாக ருத்ரா தயார் செய்து இருக்கிறார். என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு விஷ்ணு விஷால் இந்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் செய்து இருக்கிறார். மிதிலாவும் தமிழ் வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்”.

நடிகர் ருத்ரா, “இந்த தருணத்திற்காக தான் பல நாட்கள் காத்திருந்தேன். கனவு நனவாகி விட்டது. அண்ணன் என்னை ஹீரோவாக அறிமுகம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சினிமா தான் என்னுடைய முதல் நண்பன். உதவி இயக்குநராக இருந்து பின்பு நடிகராகலாம் என்பது கார்த்தி சாரை பார்த்து தான் ஐடியா வந்தது. இந்த மேடை எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் கிருஷ்ணா தான். நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஜென் மார்ட்டின் இசை மிகவும் பிடிக்கும். என்னுடைய குடும்பம், நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய அண்ணனுக்கு ஸ்பெஷல் நன்றி! அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் விஷ்ணு விஷால், ” எங்களுடைய குடும்ப கதையை புரிந்து கொண்டு அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த விழாவின் நாயகன் ஜென்மார்ட்டின் தான். புதுமுகங்கள் அறிமுகமாகும் ஒரு படத்திற்கு பாடல்களும் இசையும் மிகவும் முக்கியம். நல்ல குடும்ப கதைகளை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்பதற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘டிராகன்’ போன்ற படங்களின் வெற்றியே உதாரணம். இயக்குநர் கிருஷ்ணா அற்புதமாக இயக்கியுள்ளார். அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்”.