சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவல்லி, நடைபெறவுள்ள 60-வது ஆண்டு வைர விழா கொண்டாட்டங்கள் குறித்து விளக்கினார். கடந்த 60 ஆண்டு கால கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் சாதனைகள் மற்றும் சமூக பங்களிப்பு குறித்து அவர் எடுத்துரைத்தார். அறிவியல் கண்டுபிடிப்புகள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் தங்களது ஆராய்ச்சிகள் அமைந்துள்ளன என்று அவர் கூறினார். தங்களது சாதனைகளான முறுக்கு கம்பி கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்பு, புதுவையில் உள்ள மாத்ரிமந்திர் உருவாக்கம், உலைச் சாம்பல் தொழில்நுட்பம், புதிய பாம்பன் ரயில் பால வடிவமைப்பில் தங்களது பங்களிப்பு, மேலும் ரயில்வே துறை, பாதுகாப்பு துறை, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் பங்களிப்பு குறித்தும் அவர் எடுத்துரைத்தார். சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் திறக்கப்பட்ட செனாப் பாலத்தில் ஆராய்ச்சி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது குறித்தும் அவர் கூறினார். நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இரண்டு புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவல்லி கூறினார்.
சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள்
