ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முந்தைய அதிமுக அரசு ஓர் அரசாணையை நிறைவேற்றியது. ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முடியுமா அல்லது மத்திய அரசின் துணை வேண்டுமா என்கிற கேள்வி எழுந்த நிலையில், நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு இப்போது ஒப்புதல் வழங்கியிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1881-இல் தொடங்கி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், ஜாதிவாரியான புள்ளிவிவரத் தரவுகளையும் பிரிட்டிஷ் அரசு எடுத்து வந்தது. இறுதியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு 1931ல் நடத்தப்பட்டது. இதன் பின்னர், 1947-இல் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சுதந்திர இந்தியா தன்னைக் குடியரசாக அறிவித்துக் கொண்டதைத் தொடர்ந்து குடிமக்கள் அனைவரும் சமம் என்கிற அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை கைவிட்டது. அதன் பிறகு மத்திய அரசு 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை மட்டுமே நடத்துகிறது. அதில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் போன்ற தரவுகள் இடம் பெறுகின்றனவே தவிர, பிற்படுத்தப்பட்ட சாதியினர், முன்னேறிய வகுப்பினர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2009 முதல் 2016 வரையிலான மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2011-ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. அதாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அடங்கிய முதல் தரவுக் குறிப்புகள் திரட்டப்பட்டன.
ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பின் முழு விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவதற்கு அமைச்சரவையில் ஒருமித்த கருத்து இல்லாததால் வெளியிடப்படவில்லை. அன்றைக்கு அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலை வெளியிடக்கூடாது என்று கருத்து தெரிவித்தவர்களில் முக்கியமானவர்கள். அதற்குள்ளாக அவர்களது ஆட்சிக்காலம் முடிவடைந்து விட்டது.
பின்னர், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதும், மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையிலும், பாஜக அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தாமல் இருந்தது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வலுத்து வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்திருக்கிறது. கடைசியாக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் 2020-இல் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக பணிகள் தள்ளிவைக்கப்பட்டன. பின்னர், மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டதால் மீண்டும் தள்ளிப் போனது. தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது மிக முக்கியமான திருப்பமாகவும், வரவேற்கத்தக்க அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.
ஜாதிவாரியான கணக்கெடுப்பு கட்டாயம் – அது சமூக நீதிக்கான வித்தாக, விதையாக, உரமாக நிற்கும் என்று கருத்தொற்றுமை ஏற்பட்டால், அதற்குரிய அழுத்தங்களை அதிகப்படுத்த வேண்டும். அதற்கான கோரிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும். மத்திய அரசுப் பணிகளில், மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 27சதவீத இடஒதுக்கீட்டை 1990 – இல் வழங்கிய வி.பி.சிங் தனது ஆட்சி அதிகாரத்தை இழந்தது கவனிக்கத்தக்கது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு ஆட்சியில் முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படுகிற போதுதான் சமூகநீதி பரவலாக்கப்பட்டு பாதுகாக்கப்படும். பரவலாக்கப்படாத அதிகாரத்தின் மூலம் எந்த நீதியும் கிடைக்காது. இது உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் நியமனம் வரை இதே நிலைதான் நீடிக்கிறது.அடித்தட்டு மக்களின் வாழ்வு உயரத்தைத் தொடுவதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமான ஒன்றாகிறது. அது உணவுப்பொருள்களின் விநியோகத்தில் தொடங்கி, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய ஒன்றாகும்.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு 2022-ஆம் ஆண்டு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முற்பட்டது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படாத போது அடித்தளத்தில் இருக்கும் சமுதாயத்தினர், குறிப்பாக, கிராமப்புறப் பெண்கள் அதிகாரம் என்னவென்று தெரியாமலேயே தங்கள் வாழ்வைத் தொலைத்து விடும் அவலம் நிகழ்கிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று பாட்னா உயர்நிதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில், தமிழக அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதற்கு முனையலாம். அதற்கு உரிய துணிச்சலுடன் இந்தப் பணிகளை அவர்கள் செய்யத் தொடங்கினால், அது சமூகநீதிக்கான அடையாளமாகப் பார்க்கப்படும். பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்ட போதிலிருந்து, இதேபோன்ற கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்தியஅமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36.01சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.12 சதவீதமும், பட்டியல் சாதியினர் 19.65 சதவீதமும், இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 15.52 சதவீதமும், பட்டியல் பழங்குடியின மக்கள் 1.68 சதவீதமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36 சதவீதத்துடன் அதிக மக்கள் தொகையைக் கொண்டிருக்கின்றனர். அம்மாநிலத்தில் மொத்தம் 113 ஜாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது பீகார் சட்டப்பேரவையில் 7 சதவீத எம்.எல்.ஏக்கள் மட்டுமே இப்பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். பீகாரைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும், ஆரம்ப நாள்களில் உயர்சாதியினரே அந்த மாநிலத்தின் அதிகார மையத்தில் ஆட்சி செலுத்தி வந்தனர். இதற்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த லாலுபிரசாத் யாதவும், நிதிஷ்குமாரும் கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறார்கள்.
தற்போது ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியான நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் அந்த மாநில அரசியலில் தங்களுக்கு உரிய பங்கை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோரலாம். ஆக, தேர்தலில் இந்தப் பிரச்னை பெரிதாக எதிரொலிக்கும். கல்வி, வேலைவாய்ப்புகளிலும் இந்தக் கோரிக்கையின் அழுத்தம் வெளிப்படும். புத்தன் பிறந்த பீகாரிலிருந்து ஒரு சமூக நீதிக்கான வெளிச்சம் பிறந்திருக்கிறது என்ற நம்பிக்கைக் கீற்று அடித்தள ஜாதிகளின் கட்டமைப்புகளுக்கு நம்பிக்கை ஊட்டியது. அதன் தொடர்ச்சிதான் தற்போது ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஒப்புதலாகும்.
இந்தியாவில் இடஒதுக்கீடு நீண்ட காலமாக அமலில் இருந்தாலும், இன்னும் முழுமைப்படுத்தப்பட வேண்டும். பட்டியல் இனத்தவருக்கும், பழங்குடி இனத்தவருக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றாலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் போதிய உரிமை கிடைக்கப்பெறவில்லை என்பதே நிதர்சனம். பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு சார்ந்து முறையான அடிப்படையுடன் எந்தத் தரவுகளும் இல்லை. இருந்தபோதிலும், பொருளாதார இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. தற்போதைய அமைப்பில் அதிகாரத்தைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட சில பிரிவினரே எல்லாவற்றுக்குமான உரிமையைக் கோருகிறார்கள், பெறவும் செய்கிறார்கள். ஆகவே, மக்கள் அனைவரும் தமக்குரிய அதிகாரங்களைப் பெறுவதற்கு ஜாதிவாரியான கணக்கெடுப்பு அவசியமாகிறது. ஒவ்வொரு ஜாதி அடுக்கின் சமூகப்பொருளாதாரப் பின்னணியைத் தெரிந்து கொள்வதற்கும், சாதிகள் தங்கள் எண்ணிக்கை சார்ந்து கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் இது அவசியமாகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளித்த போது, அந்த இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பியிருந்தது நினைவுகூறத்தக்கது.
ஜாதியினரின் எண்ணிக்கை தெரிந்தால், அதே அளவுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெறும் கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கு வாய்ப்பாக அமையும் என்பதே இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. விளிம்புநிலை மக்கள் கீழே விழாமல் இருப்பதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது. இது வாக்கு வங்கி அரசியலுக்கானது அல்லாமல், நாட்டு அரசியலுக்கானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது.