மருத்துவப் படிப்பிற்கான நுழைவாயிலை வெளிப்படைத் தன்மையுடன் திறந்து வைக்க சரத்குமார் கோரிக்கை

நீட் தேர்வு வேண்டாம் என கருதும் தமிழ்நாட்டில், கொரோனா காலக்கட்டத்திலும் நுழைவுத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்றிருந்த தேசிய தேர்வு முகமை, தேர்வு முடிவுகளை தவறாக வெளியிட்டதிலிருந்தும், விடைகளை குறிக்கும் விடைத்தாள்கள் (OMR Sheet) மாற்றப்பட்டுள்ளதாக மாணவர்கள் சிலர் புகார் தெரிவிப்பதிலிருந்தும் தேசிய தேர்வு முகமையின் தரத்தினை உணர முடிகிறது. மருத்துவப்படிப்பில் உள்நுழைவதற்கு முன்பாக மாணவர்களின் தரத்தை பரிசோதிக்கும் National Testing Agency முடிவுகளை வெளியிடும் முன்பாக தனது தரத்தை பரிசோதித்து கொள்வது அவசியம். தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பாக, உயரதிகாரிகள் மேற்பார்வையில் மதிப்பீட்டை ஆய்வு செய்திருக்க வேண்டாமா? அகில இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவப்படிப்பு பொதுத்தேர்விற்கு அலட்சியமாக முடிவுகளை வெளியிடுவதும், முடிவுகளை நீக்கி பின்னர் வெளியிடுவதும் சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.

கொரோனா சூழல் ஊரடங்கால் போக்குவரத்து வசதியின்றி, தேர்வுக்கு விண்ணப்பித்த 2,30,490 (14.43%) மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதுவதற்கே வாய்ப்பு கொடுக்கப்படாத அந்த மாணவர்களின் நிலையை தேசிய தேர்வு முகமை உறுதி செய்துகொள்ளவில்லை. மொத்தம் 13,66,945 மாணவர்கள் எழுதிய தேர்வில், தேர்ச்சி பெற்ற 7,71,500 மாணவர்களில் 6,82,406 பேர் UR Category – இல் உள்ளனர். இதில் உள்ள இட ஒதுக்கீட்டு தன்மை என்ன என்பதை
தேசிய தேர்வு முகமை தெளிவுபடுத்த வேண்டும். நீட் தேர்வில் தேர்வான அனைவருக்கும் மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்குமா என்றால் நிச்சயம் இல்லை. அதனால், தேர்ச்சியடைந்த மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேரும் போது முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என்பதை வெளிப்படைத்தன்மையுடன் அறிக்கையாக மத்திய அரசு வெளியிட வேண்டும். முக்கியமாக, EWS இடஒதுக்கீட்டை விரைந்து அமல்படுத்தி வாய்ப்பு வழங்கும் மத்திய அரசு, OBC
பிரிவினருக்கு 50 சதவீதம் அல்ல, 27 சதவீதம் கூட இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது. 2017 முதல்
இழந்த OBC பிரிவினருக்கான 11,027 இடங்களையும் வழங்க மறுக்கிறது.

இது மட்டுமன்றி மருத்துவப்படிப்பில் 7.5% அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கி சட்டப்பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுக்கிறார். ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் நடப்பு ஆண்டில் 300க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகும் எனும் போது, ஆளுநர் மேலும் காலதாமதம் செய்யாமல் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும், ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைத்துவிடாமல் மருத்துவப்படிப்பிற்கான நுழைவாயிலை பாகுபாடின்றி சமத்துவமாக அனைவருக்கும் பொதுவாக திறந்து வையுங்கள் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மத்திய அரசையும், தமிழக ஆளுநரையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் சரத்குமார் கூறியுள்ளார்.