‘ரெட் லேபில்’ படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடிக்க,தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் கதாநாயகனும் தயாரிப்பாளருமான லெனின் பேசும் போது, “ பொன் பார்த்திபன் என்னிடம் கூறிய இரண்டு கதைகளில் என் பட்ஜெட்டுக்கேற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன். இந்தப் படத்தில் நாலைந்து கதாநாயகிகள் நடித்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள். இந்த கதாநாயகியின் படம் வந்து கொண்டே இருந்தது .இவரை நாங்கள் நிராகரித்து விட்டோம் .மீண்டும் மீண்டும் அவரது போட்டோவைக் காட்டினார்கள். முகத்தை கழுவி விட்டு செல்ஃபி எடுத்து ஒரு போட்டோ அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தோம். அவரும் அப்படியே அனுப்பி இருந்தார் .அவர் தேர்வாகி விட்டார். உண்மையைச் சொன்னால் இந்த படத்தின் தலைப்பே அவர் சொன்னதுதான். இதற்கு முன்பு நாங்கள் ஒரு சாதாரண தலைப்பையே வைத்திருந்தோம்.*******
இயக்குநருக்கும் எனக்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவர் மிகவும் பொறுமைசாலியாக இருந்து அனைத்தையும் சமாளித்தார். எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்று பொறுமை காட்டினார் .அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .சொன்னது போல் படத்தை எடுத்து முடித்து விட்டார் . ஆர்.வி.உதயகுமார் சார் பற்றி இங்கே சொல்ல வேண்டும். அவர் இந்தப் படத்தில் நடிப்பது என்று முடிவாவதற்கு முன்பாகவே அவர் எங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே எனக்காக அவர் தயாரிப்பாளர் சங்கத்திலும் பெப்சியிலும் பேசி பல சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். அந்த உதவியை மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயமாக பார்க்கும் படியாக இருக்கும். திருப்தி தரும் படமாக இருக்கும் என்பதற்கு நான் 100% உத்திரவாதம் தருகிறேன்” என்றார்.
இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசும்போது,* ” முதலில் இந்தத் தலைப்பை நான் பாராட்டுகிறேன். நல்ல அழகான தலைப்பு. தயாரிப்பாளர் லெனினை முதலில் பாராட்டுகிறேன். நான் கோயம்புத்தூர் காரனாக இருந்தாலும் எந்த கோயம்புத்தூர்க்காரரும் எனக்கு வாய்ப்பு கொடுத்ததில்லை. இவர் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.என்னிடம் வந்ததுமே முதலில் படம் தயாரிக்கிறாயா? யோசனை செய் ,எச்சரிக்கையாக இரு என்றுதான் நான் சொன்னேன். முதலில் அவர் நடித்த ‘உன் கூடவே’ என்கிற பாடல் ஆல்பத்தைப் பார்த்தேன். அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு கொடுத்த உந்துதலில் தயாரிப்பாளராக வந்து விட்டார். கதாநாயகன் ஆகிவிட்டார். ஒத்த மனநிலை கொண்டவர்களுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். எனவே இந்த படப்பிடிப்பு இனிமையாக இருந்தது. ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாகச் சிறந்த கதைகள் வருவதில்லை. பாசமலர், குடும்பம் ஒரு கதம்பம் போன்ற கதைகள் இப்போது எங்கே வருகின்றன? அப்போது படங்களைப் பார்த்த விட்டு வந்தால் படங்களைப் பற்றி திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள்.படம் நன்றாக இருந்தால் குடும்பத்தோடு வண்டி கட்டிக்கொண்டு தியேட்டருக்குச் சென்ற காலம் அது. இப்போது அப்படி இல்லை.அனைவரும் பார்க்கும் படி படம் எடுக்கிறார்களா? ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள் .மற்றவர்கள் படம் பார்க்க வேண்டாமா? திரையரங்குகளில் ஏன் ஆள் வரவில்லை என்று கேட்கிறார்கள். ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள் .அனைவரும் பார்க்கும் படியான வாழ்வியல் கதைகளை வைத்து படமாக எடுக்க வேண்டும். அப்படி இன்று படங்கள் வருவதில்லை. புதியவர்கள் முயற்சி செய்ய வேண்டும். இந்தப் படக் குழுவினரை வாழ்த்துகிறேன்” என்றார்.
படத்தின் இயக்குநர் கே. ஆர். வினோத்* பேசுவதற்கு முன் தனது 12 உதவி இயக்குநர்களையும் மேடையில் ஏற்றி அறிமுகப்படுத்தி சபையினரின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொடுத்தார். இது ஒரு புதிய தொடக்கமாக இருந்தது.
இயக்குநர் தொடர்ந்து பேசும்போது, “நாங்கள் வளர்ந்து வரும் படக் குழுவினர். நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எனவே தான் பலரும் நேரம் காலம் பார்க்காமல் அனைவரும் உழைத்தனர். இது ஒரு தனி மனித முயற்சியல்ல. அனைவரும் சேர்ந்து உழைத்ததால் தான் படம் நன்றாக வந்துள்ளது. உதயகுமார் சார் ஒரு வழிகாட்டி போல் இருந்து தயாரிப்பாளர் இயக்குநரை நம்பி அனைத்தையும் செய்தார். அவரிடம் நான் ஒரு உதவி இயக்குநரைப் போல கற்றுக் கொண்டேன்.கதாநாயகன் படப்பிடிப்பில் முதல் இரண்டு நாள் சுமாராக நடித்தார். மூன்றாவது நாளிலிருந்து முழு நடிகராக அவர் நடிக்கத் தொடங்கிவிட்டார்.அப்படி நடித்து இப்போது அனைவராலும் பாராட்டப்படும் நிலைக்கு வந்து விட்டார். படம் நன்றாக வந்துள்ளது. இது நாகரிகமான படம். நிச்சயமாக அனைவரையும் திருப்திப் படுத்தும் “என்றார்.

