தமிழகத்தின் அடுத்த இசை நட்சத்திரத்தைத் தேடும் பயணம் சென்னையில் தொடங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திறமையான பாடகர்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியின் முதல் நேரடி ஆடிஷன் ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தப் போட்டியின் முதல் சீசனின் தொகுப்பாளர்களாக விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பூஜா வெங்கட் இணைந்துள்ளனர். சோனி விழா மற்றும் சோனி லைவ் இணைந்து தமிழ் ரசிகர்களுக்காக வழங்கும் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சிக்கு நீதிபதியாக ஏ.ஆர். ரஹ்மான் தலைமை வகிக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள தனித்துவமான குரல்களையும் இசைத் திறமைகளையும் கண்டறிந்து, அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். சென்னையில் நடைபெறும் முதல் கட்ட ஆடிஷன் மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா வளாகத்தில் நடைபெறுகிறது. 14 முதல் 30 வயது வரையிலான ஆர்வமுள்ள பாடகர்கள் இந்த ஆடிஷனில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தலாம்.********
இதுகுறித்து விக்கல்ஸ் விக்ரம் கூறுகையில், “தமிழகம் அசாத்தியமான இசைத் திறமைகளைக் கொண்ட மண். அந்தத் திறமைகளுக்கு வாய்ப்பு அளித்து, அவர்களின் குரலை உலகம் கேட்கச் செய்யும் ஒரு மேடையின் அங்கமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. ‘தமிழ் ஐடல்’ என்பது சிறந்த பாடகர்களைத் தேடும் நிகழ்ச்சி மட்டுமல்ல; தமிழகத்தின் பல்வேறு இசைத் திறமைகளை ஒன்றிணைத்து, வளர்ந்து வரும் கலைஞர்களை இன்னும் பெரிய கனவுகளை நோக்கிச் செல்ல வைக்கும் மேடை. ஏ.ஆர். ரஹ்மான் சார் தலைமையில் இந்தப் பயணம் நடைபெறுவது நிகழ்ச்சியின் வாய்ப்பையும் எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்துகிறது. போட்டியாளர்களை சந்தித்து, அவர்களின் கதைகளைக் கேட்டு, அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் முதல் அடியை நேரில் காண ஆவலாக இருக்கிறேன்” என்றார்.
பூஜா வெங்கட் கூறுகையில்..,, “ஒருவரின் குரலை முதல் முறையாகக் கேட்டு, அதில் இருக்கும் தனித்துவத்தை கண்டறிவது மிகவும் சிறப்பான அனுபவம். இசை, உணர்வு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கதைகளை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியாக ‘தமிழ் ஐடல்’ உருவாகியுள்ளது. இதன் தொகுப்பாளராக இருப்பது எனக்கு பெருமை. ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது குரலை நம்பிக்கையுடனும் தயக்கமின்றியும் வெளிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஒரு வசதியான, ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த உற்சாகமான அத்தியாயம் சென்னையில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 23-ம் தேதி ஆடிஷன் அரங்கிற்குள் நுழையவிருக்கும் திறமைகளை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

