இசை உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தமாக வேண்டும் – கே ராஜன்

ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ்  சார்பில் பி. பாண்டுரங்கன் தயாரிப்பில் கஜேந்திரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ‘குற்றம் தவிர்’. ரிஷி ரித்விக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.ஆராத்யா நாயகி.சித்தப்பு சரவணன், சென்ராயன், வினோதினி  மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, ‘ஒரு படத்தின் பாடல்களின் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம். ஒரு படத்தின் பாடல் மொத்தமாக இசை என்பதே தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம்.*******

ஏனென்றால் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்து, இயக்குநருடன் பேசி, கதாநாயகனுடன் பேசி, பிறகு இசையமைப்பாளருடன் பேசுகிறோம்.இயக்குநர் கதைக்கேற்ற சூழலைச் சொல்லி அதற்கு ஏற்ற மெட்டை இசையமைப்பாளரிடம் இயக்குநர்தான் வாங்குகிறார்.

இயக்குநர் செல்லும் வேலையைத்தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டும்.இசையமைப்பாளர் தன்னிச்சையாக தன் இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியாது.10 மெட்டுக்கள் வாங்குவோம் சில நேரம் 25  மெட்டுக்கள் கூட வாங்கித் தேர்ந்தெடுப்போம்.

கொத்தனார் வீடு கட்டுகிறார்.அந்த கொத்தனார் தினசரி கட்டிடம் கட்டுகிறார் அவருக்குக் கூலி கொடுத்து விடுகிறோம். கட்டட வேலைகள் எல்லாம் முடிந்து கிரகப்பிரவேசம் செய்யும் போது அந்தக் கட்டடம் எனக்குத் தான் சொந்தம் , நான்தான் கட்டினேன் என்று சொன்னால் எப்படி முட்டாள்தனமாக இருக்குமோஅதைப்போல எங்கள் இசை இசையமைப்பாளருக்குத் தான் சொந்தம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. நாங்கள் அதற்குரிய சம்பளத்தைக் கொடுத்து விட்டோம் .அவர் எங்களுக்கு வேலை செய்தார். அது யாரா இருந்தாலும் சரி. இன்று அது வழக்கில் இருக்கிறது எங்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம் . அவர் ஒரு பெரிய இசைஞானி அதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரிய பேராசையின் காரணமாக பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார். அவர் செய்வது அத்தனையும் சரியில்லாதது . பாடலைப் பாடுபவர்கள், வாத்தியங்கள் வாசிப்பவர்கள், வரிகள் எழுதுபவர்கள் அவர்களுக்குச் சொந்தம் இல்லையா? இவை அத்தனையும் தவறானது. ஒரு தயாரிப்பாளருக்குத் தான் பாடல்கள் அத்தனையும் சொந்தம் “என்றார். 

இயக்குநர் கஜேந்திரா பேசும்போது, “நாட்டில் புதிது புதிதாக நோய்கள் வருவதாகக் கண்டுபிடிக்கிறார்கள் அது போல புதிது புதிதாகக் குற்றங்கள்  நடக்கின்றன .அப்படி ஒரு குற்றத்தைக் கதாநாயகன் கண்டு பிடிக்கிறார் .அதைத் தடுக்க நினைக்கிறார். அப்போது அவர் எதிர்கொள்கிற பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கிறது. விளைவு என்ன என்பதுதான் படத்தின் கதை. படத்தில் நல்ல கருத்தைச் சொல்லி இருக்கிறோம்.

நாட்டில் நடந்த மிகப்பெரிய ஸ்கேம் பற்றிப் படத்தில் விரிவாகக் கூறி இருக்கிறோம் .படம் வந்ததும் அது பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் .அப்படிப்பட்ட பிரச்சினையால்  பாதிக்கப்பட்டவர்கள் படத்தைப் பார்க்கும்போது தங்கள் கதையாக உணர்வார்கள். படத்தை இரண்டு ஷெட்யூலில் முடிக்கப் போகிறோம் .சென்னை, பெங்களூர் என்று படப்பிடிப்பு நடைபெற உள்ளது. புதிய படக்குழு என்று பாராமல் தயாரிப்பாளர் நாங்கள்  கேட்ட வசதிகள் எல்லாம் செய்து கொடுத்து உதவுகிறார்.அவருக்கு எங்கள் நன்றி “என்றார்.