மி்ன் கலம் மாற்றும் வசதி மற்றும் விரைவான பரிமாற்ற சேவை சண்டிகரில் தொடக்கம் நாட்டில் மின்சார வாகன இயக்கம் அதிகரிக்க தொழில் நுட்பத்தை நாம் மேம்படுத்தவேண்டும்: திரு. தர்மேந்திர பிரதான்

புதுதில்லி, ஜூன் 26, 2020. மின்கலம் மாற்றும் வசதி மற்றும் விரைவான பரிமாற்ற சேவையை சண்டிகரில் பஞ்சாப் ஆளுநரும் சண்டிகர் நிர்வாகியுமான திரு வி.பி.சிங் பத்னோர், மத்திய பெட்ரோலியத்துறை, இயற்கை வாயு மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில், பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு. தருண் கபூர், இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் திரு.சஞ்சீவ் சிங், மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகம், சண்டிகர் யூனியன் பிரதேசம், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மின்கலம் மாற்றும் தொழில்நுட்பம், தாமதமான மின்னேற்ற பிரச்னைக்கு, சிறந்த மாற்றாக உள்ளது மற்றும் வாகன ஓட்டுனர்களின் பணி நேரம் பாதிக்காமல் இருக்கவும் உதவுகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. தர்மேந்திர பிரதான், ‘நவீன மற்றும் அழகான சண்டிகர் நகரில், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் சன் மொபிலிட்டி நிறுவனமும் இணைந்து, இந்த வசதியை முன் மாதிரித் திட்டமாக நிறுவியுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’என்றார்.
மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பை அதிகரிக்க அழைப்பு விடுத்த அவர், ‘இந்தியாவில் மின்சார வாகன இயக்கம் அதிகரிக்கவும், இது மலிவாக கிடைக்கவும், நாம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்’’ என கூறினார். இந்த நடவடிக்கை, பிரதமரின் தொலை நோக்கு திட்டமான சுயசார்பு இந்தியா திட்டத்தை நோக்கி சரியான திசையில் செல்கிறது என அவர் மேலும் கூறினார்.