சமூக வலைத்தளத்தில் தனிநபர் மீது அவதூறு பரப்பினால் கேரளத்தில் 5 ஆண்டுறை தண்டனை

பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து கேரள அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று ஒப்புதல் அளி்த்துள்ளார். ஆனால், இந்த சட்டம் போலீஸாருக்கு அதிகமான அதிகாரம் அளிக்கும், கருத்துச் சுதந்திரத்தை முடக்கும், பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன், “ இந்த அவசரச் சட்டம் ஆதாரங்கள் அடிப்படையில், சமூக வலைத்தளத்தில் தனிநபர்களின் மரியாதையை, மாண்பைக் குலைக்கும் வகையில் பதிவிட்ட கருத்துக்கள், அவர்கள் அடைந்த பாதிப்புகளை அடிப்படையாக வைத்தே இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கேரள போலீஸ் சட்டத்தில் பிரிவு 118ல் 118ஏ என்ற ஓர் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, போலீஸாருக்குகூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு தனநபரின் மரியாதையை, மாண்பைக் குலைக்கு உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் ,படங்களை, பதிவேற்றம் செய்தால், பரப்பினால், ஷேர் செய்தால், அல்லது பிரசுரித்தால், அவருக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம், 5 ஆண்டு சிறை விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களின் மரியாதையைக் குலைக்கும் வகையில் போலியாக செய்திகளை சித்தரித்து வெளியிடுதல், வெறுப்புப்பேச்சு, பொய்யான செய்திகளை பரப்புதல் போன்றவற்றால் குற்றங்கள் தொடர்ந்து அதிகரி்த்து வந்தன. சைபர் தாக்குதல்களை தடுப்பது பெரும் சிரமமாக நாளுக்குநாள் கேரள போலீஸாருக்கு மாறி வந்தது. இதையடுத்து, தனிநபர்கள், பெண்கள், குழந்தைகள் மீதான சைபர் தாக்குதல்களை தடுக்கும் வகையில் போலீஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.