செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் உள்ள தணிகை அம்மன் கோவில் தெரு, ஏஎம்இ நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கக்கூடிய 90 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சில வருடங்களாக மின் இணைப்பு இல்லாமல் வசித்து வந்த நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்று இந்த கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றி மின் இணைப்பு வழங்கிட சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.விஜயராஜ் அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதன் தொடர் முயற்சியாக இப்பணியினை மேற்கொண்டு அப்பகுதி மக்களுக்கு புதிய மின் இணைப்பிற்கான ஆணைகளை இன்று மாண்புமிகு மனித வள மேலாண்மை துறை அமைச்சர் திரு.சரத்குமார் அவர்கள் முன்னிலையிலும், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.மு. வீரப்பன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.விஜயராஜ் அவர்களின் திருகரங்களாலும் 90 நபர்களுக்கான ஆணை வழங்கப்பட்டது.
அப்பகுதி இருள் சூழ்ந்த பகுதியாக இருந்தது தற்போது மின் இணைப்பிற்கான ஆணை வழங்கப்பட்டு தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விதமாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரு விளக்குகளுக்கான பொத்தானை அழுத்தி மின்சார பயன்பாட்டினை துவக்கி வைத்து அப்பகுதிக்கு வெளிச்சத்தை உண்டாக்கினார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அதனை வரவேற்கும் விதமாக மிகவும் ஆரவாரமாக வரவேற்று தங்களுடைய மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.மு.வீரப்பன்,இ.ஆ.ப., திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.விஜயராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மா.கணேஷ் குமார் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

