சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த திரு. ஜெயராஜ், திரு. பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 25,00,000/- ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும். – முதல்வர் துணை முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திரு.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் திரு. பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த துயர நிகழ்வு துரதிருஷ்டவசமானதும், மிகவும் வேதனைக்குரியதுமாகும். இத்தகைய வேதனை அளிக்கும் சம்பவங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. குடும்பத்தின் இரண்டு தூண்களாய் இருந்த தந்தையையும், மகனையும் இழந்து வாடும் அக்குடும்பத்தினருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. திரு. ஜெயராஜ், திரு. பென்னிக்ஸ் ஆகியோரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தமிழக மக்களின் அடைக்கலமாகவும், அரணாகவும் திகழும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும். தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காகவே அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் கழக அரசும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் என்றென்றும் மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில் பணியாற்றி, நீதியை நிலைநாட்டும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்