விவசாயிகள் தொழிலாளர் – கறுப்பு நாள் – போராட்டத்திற்கு இ.கம்யூ. ஆதரவு

பாஜக ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத, வேளாண் வணிக சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த நவம்பர் 26 ஆம் தேதி “டெல்லி சலோ” என்ற இயக்கத்தை அறிவித்து, விவசாயிகள் டெல்லி வந்த போது, நகரின் நுழையும் நெடுஞ்சாலைகளில் அவர்கள்  தடுத்து நிறுத்தப்பட்டனர். பாஜக ஒன்றிய அரசும், அரியானா, உத்தரப் பிரதேச பாஜக மாநில அரசுகளும் விவசாயிகள் மீது கடுமையான அடக்குமுறை ஏவிய போதும், அவர்கள் உறுதியாக போராடி வருகின்றனர். இப்போராட்டம் வரும் 26.05.2021 ஆம் தேதியுடன் ஆறு மாதங்களை நிறைவு செய்கிறது.
தொழிலாளர்கள் நலனுக்கான சட்டங்களை நீக்கிவிட்டு, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு எல்லையற்ற அதிகாரம் அளிக்கும், தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கோட்பாடுகள் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து ஏஐடியூசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டு கடந்த நவம்பர் 26 நாடு தழுவிய வேலை நிறுத்தம் மேற்கொண்டன. நியாயமான கோரிக்கைகள் மீது நடைபெறும் போராட்டங்களுக்கு தீர்வு காண முன்வராத ஜனநாயக விரோத பாஜக ஒன்றிய அரசு அதிகாரத்தில் அமர்ந்து ஏழாண்டுகள் ஆகின்றன. இந்த ஏழாண்டு காலத்தில் நாடு கடுமையான நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டுள்ளது.  கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கி 16 மாதங்கள் ஆகின்றன. இடையில் கொரோனாவை வென்று விட்டதாக நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சரும் வாய்ச்சவடால் பேசினர். ஆனால் இப்போது நோய்த்தொற்றின் இரண்டாம் அலை அதி வேகமாக பரவி, அன்றாடம் ஐயாயிரம் குடிமக்களின் உயிரை பறித்து வருகிறது. குடிமக்களுக்கு போதுமான தடுப்பு மருந்துகள் கொடுக்காமல், அவைகளை ஏற்றுமதி செய்து, கார்ப்ரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க பாஜக அரசு உதவியது. தடுப்பு மருந்து இல்லை, மருத்துவ உயிர்காற்று (ஆக்சிஜன்) இல்லை, மருந்துவமனைகளில் படுக்கை வசதியில்லை, ஏன் கொத்துக் கொத்தாக செத்துப் போகும் மனிதர்களை எரிக்க, புதைக்க மயானங்களில் இடமில்லை என அவமானகரமான நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டுக்கு ஏற்படுள்ள துயரத்தையும், விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வுக்கு வந்துள்ள துன்பத்தையும் வெளிப்படுத்தவும்,  இதற்கு காரணமான பாஜக ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவும் வரும் 26.05.2021ஆம் தேதி கறுப்பு நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் போராட்டக் குழுவும், மத்திய தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன. இதனை இந்தக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு முழுமையாக ஆதரிக்கிறது. கறுப்பு நாள் போராட்டம் வெற்றிகரமாக அமைந்திட  கட்சி அனைத்து ஒத்துழைப்பும் வழங்கும் என தெரிவித்துக்கொள்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் தடுப்புக்காக 24.05.2021 முதல் 31.05.2021 முடிய ஒரு வார காலம் தளர்வு இல்லாத ஊரடங்கு அமலில் இருப்பதால் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா, உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில், தொழிற்சாலைகளில், கடைகளில் கறுப்புக் கொடி ஏற்றி, விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜக ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது, 
இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு மாநிலக்குழு