டவண் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “பராசக்தி”. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: “சுதா மேம் 1960 களில் நடப்பதாகக் கதை அமைத்திருந்தார். அவர் தான் இந்தப்படம் பண்ணக்காரணம். இந்தப்படத்திற்காக 4,5 வருடம் அவர் உழைத்திருந்தார். அவர் சொன்னதைச் செய்தால் போதும். இந்தப்படம் செய்வது எல்லோருக்குமே கஷ்டம் தான். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு உழைத்துள்ளார்கள். அதர்வாவிற்கும் எனக்கும் உள்ள நட்பு உண்மையான அண்ணன் தம்பி போலத்தான். அவர் முதல் படத்திற்கு புரமோசன் நிகழ்ச்சிக்கு அப்பாவுடன் வந்தார், நான் தான் ஹோஸ்ட் செய்தேன். இந்தப்படத்தில் சேர்ந்து நட்சத்திருப்பது மகிழ்ச்சி. ஶ்ரீலீலாவை தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் கஷ்டமான டான்ஸ் மூவ்மெண்ட் தராததற்கு டான்ஸ் மாஸ்டருக்கு நன்றி. ரவி மோகன் சார் இந்தப்படத்திற்கு ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியம்.******

ஹீரோவாக கதை கேட்டுத் தேர்ந்தெடுப்பதே கஷ்டம். ஆனால் ஹீரோவாக ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, வில்லனாக ஒத்துக்கொள்வது மிகப்பெரிய விஷயம். அவர் எப்போதும் எனக்குக் கல்லூரியில் பார்த்த ஹீரோ தான். அவர் தான் எங்கள் செட்டில் மூத்தவர், அவர் பெயர் தான் முதலில் இருக்கும். அவரை அப்படித்தான் நாங்கள் பார்க்கிறோம். ஜீவி பற்றி என் அம்மா சொன்னார்கள், அந்தப்பையன் சின்ன வயதிலிருந்து இசையமைக்கிறார் போல 100 படம் செய்துவிட்டார் என்றார். 100 படத்திலும் வித்தியாசமான ஜானர்கள் செய்து அசத்தியுள்ளார். இது 25 வது படமாக நடக்கக் காரணம் ஆகாஷ் தான். அவர் தான் இந்தப்படம் 25வதாக இருக்கட்டும் என்றார். இந்த மாதிரி ஒரு டீம், இந்த மாதிரி ஒரு கதை, எனக்கு 25 வது படமாக கிடைத்தது என் வரம் தான். பராசக்தி அருள் தான் காரணம். பராசக்தி ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேசும் படம். காதல், பாசம், வீரம், புரட்சி என எல்லாத்தையும் பேசும் படமாக இருக்கும். இந்த பொங்கலுக்கு நல்ல கொண்டாட்டமாக இருக்கும் பார்த்து ரசியுங்கள்
நடிகர் ரவி மோகன் பேசியதாவது.., “ஊரே இந்தப்படம் பற்றித் தான் பேசுகிறது. இந்தப்படம் மிகப்பிரம்மாண்ட படம். படத்திற்குள் நான் போகும் முன் எனக்குமே நிறையத் தயக்கம் இருந்தது. ஆனால் இந்த படத்திற்காக உழைப்பைப் போட்ட அனைவரையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவ்வளவு உழைத்துள்ளார்கள். என்னை அவ்வளவு அற்புதமாகப் பார்த்துக்கொண்டார்கள். என்னை நன்றாக பார்த்துக்கொண்ட சுதா மேடமுக்கு நன்றி. என்னைச் சரியாக அந்த கதைக்குள் கொண்டு சேர்த்துவிட்டார். ஆகாஷ் பாஸ்கரன், ஒரு ஹீரோ வைத்து படமெடுப்பதே கஷ்டம், அவர் மூன்று ஹீரோ வைத்துப் படமெடுத்துள்ளார். அதர்வாவை இந்தப்படத்தில் கொண்டாடுவீர்கள். அதர்வாவிற்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். ஶ்ரீலீலாவை ஒரு நல்ல நடிகையாக இப்படத்தில் கொண்டாடுவார்கள். சிவா என்னிடம் அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார். ஒரு சின்ன அடிபட்டால் கூட என்னையும் அடித்துக்கொள்ளுங்கள் என்பார். சிவாவின் 25 படத்தில் நானும் இருக்கிறேன் என்பது பெருமை. பராசக்தி திரைப்படம் திரைத்துறையில் மிக முக்கியமான படமாக இருக்கும் நன்றி.
இயக்குநர் சுதா கொங்கரா பேசியதாவது.., “திரைப்படம் மூலம் நாம் ஒவ்வொரு வாழ்வியலில் போய் வாழலாம். அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இறுதிச்சுற்று படத்தில் ஒரு குத்துச்சண்டை உலகில் வாழ்ந்தது போல், பராசக்தி படத்தில் நம் வரலாற்றுக் காலத்தில் நுழைந்து பார்த்திருக்கிறோம். நம் உரிமைக்காக நாம் சண்டையிட வேண்டும் எனும் கருத்து என்னை மிகவும் பாதித்தது. வரலாற்று உலகைத் திரும்பக் கொண்டு வர ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம். அந்த காலகட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளோம். 1960 காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்து விட்டு வந்தது போல் இருக்கிறது. கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.

