‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் பதாகை வெளியீடு

வி.6.பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் இயக்கத்தில், மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. இப்படத்தின் பதாகை  வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. தூய்மை பணியாளராக வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக துணை நிற்கிறார். வறுமை மற்றும் சமூகத்தில் நிலவும் பல்வேறு தடைகளைக் கடந்து, தன் மகனின் கனவை நனவாக்க அந்த தாய் எப்படி போராடுகிறார் என்பதே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது. இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.*******

தற்போது வெளியாகியுள்ள பதாகையில், சதுரங்க கட்டங்கள் நிறைந்த பின்னணியில் தாயும் மகனும் வெவ்வேறு உணர்வுகளுடன் இடம்பெற்றுள்ளனர். செஸ் காயை கையில் ஏந்தியபடி சிறுவன் நம்பிக்கையுடன் மேல்நோக்கிப் பார்க்க, மறுபுறம் தாய் கவலையும் வலியும் கலந்த பார்வையுடன் காட்சியளிக்கிறார். அவர்களைச் சுற்றிலும் நகரும் செஸ் காய்கள், கீழ்ப்பகுதியில் தாய் தனது மகனுடன் சைக்கிளில் பயணிக்கும் காட்சி என போஸ்டர் முழுவதும் கதையின் போராட்டத்தையும் கனவையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. படத்திற்கு அர்ஜுன் ரவி – ஞானசேகர் ஆர்.எஸ். ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். ரஞ்சீத் சி.கே. படத்தொகுப்பையும், ராகவன் சஞ்சீவி கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

திண்டுக்கல், மதுரை, தடா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.