லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தினை ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார். அவர் சொன்ன கதையைக் கேட்டுவிட்டு நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசையமைத்து, தயாரிப்பாளராக இணையவும் முடிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இருந்து வேறுபட்டு, முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.மாளவிகா மனோஜ், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.*******
இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் பணிபுரியவுள்ளார். ‘கர்ணன்’, ‘வாழை’ உள்ளிட்ட பல படங்களுக்கு தனது ஒளிப்பதிவின் மூலம் மெருகூட்டியவர் இப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

