வாலிபால் போட்டியை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்தின்  சென்னை மாவட்ட  வாலிபால் சங்கம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால்  சாம்பியன்ஷிப் போட்டி-2023 சென்னை நேரு விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம்   மற்றும் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 2023 ஜனவரி  23-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.

சாம்பியன்ஷிப் போட்டிகளில் சுமார் 100 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து
1200-கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது.  பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இலவச உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகிறது.  வெற்றியாளர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள்,  மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடக்க விழா ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று    (23.01.2023) நடைபெற்றது.

 மாண்புமிகு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த  சாம்பியன்ஷிப்  போட்டி யினைத்  தொடங்கி வைத்தார். அதன் பின் இப்போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து, திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் சென்னை அருகம்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி இடையே நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

பின்னர் சிறப்புயுரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள்,  பேசும்போது

100 அணிகள் தான் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளது, நம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளை விட இங்கு வந்து உள்ளவர்கள் குறைவு தான், வாலிபால் போட்டியை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.தமிழ்நாட்டில் இருந்து 4 வீரர்கள் தேசிய அளவில் விளையாடி கொண்டு உள்ளனர், உயரமானவர்கள் மட்டுமே விளையாடும் போட்டியாக இருக்கும் இந்த வாலிபால் போட்டியை, நல்ல உயரத்திற்கு கொண்டு வர வேண்டும்.

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர், இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலும்  நம் மாநிலத்தின் விளையாட்டு பட்ஜெட் அதிகரிக்க வேண்டும் எனவும்  மாண்புமிகு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். வரும் ஆண்டுகளில் விளையாட்டு துறைக்கு அதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வெற்றி தோல்வி முக்கியம் இல்லை பங்கு பெறுவது தான் முக்கியம் அதில் நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று உள்ளீர்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்     தமிழ்நாடு மாநில வாலிபால்  சங்கத் தலைவர் டாக்டர்.பொன்.கௌதம் சிகாமணி, எம்.பி., எழும்பூர் சட்டமன்ற  உறுப்பினர் திரு.ஐ.பரந்தாமன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர்.  அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர். கா.ப. .கார்த்திகேயன், இ.ஆ.ப.   பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம் திரு.ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர்,  மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.