சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பில் 250 பேர் மட்டுமே அனுமதி அனுமதிக்கப்பட்டனர்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் நாளை முதல் அனுமதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் 250 பக்தர்கள் வீதம் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் வரும்போது கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அத்தகைய பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மலையாள மாதப் பிறப்பின்போதும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் பூஜைகள் நடத்தப்படும். பின்னர் நடை அடைக்கப்படும். அந்தவகையில் நாளை மலையாள மாதமான துலாம் மாதம் பிறப்பதால் இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. இன்று நடை திறக்கப்பட்டு எந்தப் பூஜையும் நடக்காது. அதன்பின் நாளை காலை 5 மணிக்கு சிறப்பு ஆராதனைகளுடன் நடை திறக்கப்பட்டு, அடுத்த 5 நாட்களுக்கு பூஜைகள் நடக்கும். அதன்பின் 22-ம் தேதி மீண்டும் நடை சாத்தப்படும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்கள் சபரிமலை செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு மாதப் பிறப்பின்போதும், பக்தர்கள் இன்றி கோயில் ஊழியர்கள், நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

இந்நிலையில் மாதப் பிறப்பின்போது சபரிமலைக்குப் பக்தர்களைத் தரிசனம் செய்ய அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நாளை முதல் 5 நாட்களும் நாள்தோறும் 250 பக்தர்களுக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்டுவார்கள். கோயிலில் சாமி தரிசனத்துக்கு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்துக்கு வரும்போது கரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. பக்தர்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து சாமி தரினம் செய்ய வேண்டும். கூட்டமாக நிற்கவும், நடக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. பக்தர்கள் வருகையை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிடவும், கேரள ஆயுதப்படையின் 5-வது கமாண்டன்ட் கே.ராதாகிருஷ்ணன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வசசீர்கரா, எருமேலி வழியாக அனுமதிக்கப்படமாட்டார்கள். அந்தப் பாதை மூடப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரத்தில் சன்னிதானம், நிலக்களூர் பம்பாவில் தங்கவும் அனுமதியில்லை. பக்தர்கள் வசதிக்காக சன்னிதானம், நிலக்கல், பம்பா ஆகியவற்றில சிறப்பு மருத்துவ முகாம்களை கேரள அரசு அமைத்துள்ளது.