தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

தமிழக மீனவர்கள் 4 பேரை நடுக்கடலில் கடந்த மாதம் கொலை செய்த இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழகத்தைச் சேர்ந்த கடல்சார் மக்கள் நலச் சங்கமம் எனும் அமைப்பு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

”தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கடலுக்குள் மீன்படிக்கச் சென்றனர். ஆனால், அவர்கள் திரும்பி வரவில்லை. அதன்பின் மற்ற மீனவர்கள் அளித்த தகவலின்படி, இலங்கைக் கடற்படையினர் கொலை செய்துவிட்டதாக அறிந்தோம். கடந்த மாதம் 21-ம் தேதி இந்தியக் கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் எடுக்கப்பட்டன. இலங்கைக் கடற்படையினர் அளித்த தகவலில், இலங்கைக் கடற்படையின் மீது மீனவர்கள் படகு மோதி கடலில் மூழ்கிவிட்டது என்றனர். இந்தச் சம்பவத்துக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். கடல்சார் வளங்களைப் பயன்படுத்துவதிலும், கடல் எல்லையைத் தீர்மானிப்பதிலும் தொடர்ந்து சிக்கல் எழுந்து வருகிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் உடைமைகளைப் பாதுகாக்கவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உத்தரவிட வேண்டும். தமிழக மீனவர்கள் 4 பேரைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும். உயிரிழந்த தமிழக மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும்” இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளக் கடற்பகுதியில் இரு இந்திய மீனவர்களை இத்தாலி கடற்படையினர் சுட்டுக்கொன்றபின், கடற்படை அதிகாரிகள் சல்வடோர் கிரோனி, மசிமிலானோயி லட்டோர் ஆகிய இருவரையும் கேரளக் கடற்படையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தையும் குறிப்பிட்டு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.