திருப்பத்தூரில் சித்த மருத்துவ நோய் தடுப்பு சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது

தமிழகத்திலேயே முதன்முறையாக திருப்பத்தூரில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்தமருத்துவ நோய் தடுப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் சித்த மருத்துவர்கள் மூலம் கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உடல் வெப்ப நிலை பரி சோதனை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்துகொள்ளலாம். உடனடியாக கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. நோயாளிகளுக்கு இலவச சித்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு, சித்த மருந்துகள், 5 மூலிகைகள் கொண்ட மூலிகை குடிநீர் மற்றும் இஞ்சி சாறு தேன் கலவை வழங்கப்பட்டு மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள வைரஸ் தொற்றை அளிக்க மூலிகை தூப புகை போடப்பட்டு நோயாளிகளை சுவாசிக்க வைக்கிறார்கள். மேலும் கொரோனா நோயளிகளுக்கு வாசனையற்ற நிலையை போக்க ஓமப்பொட்டணம் என்னும் சித்த மருந்து வழங்கப்படுகிறது. இது குறித்து அரசு சித்த மருத்துவர் உமேரா கூறுகையில் முதல் முறையாக கலெக்டர் சிவன்அருள் உத்தரவின் பேரில் சித்தமருத்துவ நோய் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை வரும் நோய் தொற்று உள்ள நோயாளிகளுக்கு ஆலோசனைகள், சித்த மருத்துகள், மூலிகை குடிநீர், கபசுரக் குடிநீர், கைகளை கழுவ ஆல்கஹால் இல்லாத மூலிகை கிருமி நாசினி, தூப புகை, இஞ்சிச்சாறு தேன் கலந்த கலவை மற்றும் மூலிகை முககவசம் இலவசமாக வழங்குகிறோம். ஆரம்பித்த முதல் நாளிலேயே 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து சித்த மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் பெற்றுச் சென்றுள்ளனர்.