மேகதாட்டுத் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதலா? தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் எழுப்பியுள்ள கேள்வி

தமிழ்நாட்டிற்குப் பாதிப்பில்லாமல் கர்நாடகத்தின் மேகதாட்டு அணைத் திட்டம் அணுகப்படும் என தலைமையமைச்சர் மோடி, தன்னைச் சந்தித்த நாடாளுமன்ற திமுக உறுப்பினர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையானால், மேகதாட்டு அணைத் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி அளிக்கப்போகிறது என்பது இச்செய்தியின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இதைவிட பேரபாயம் தமிழகத்திற்கு வேறில்லை. மேகதாட்டு அணைக் கட்டப்பட்டுவிட்டால், தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கும் காவிரி நீர் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுவிடும் என்பதில் ஐயமில்லை. காவிரிப் படுகைப் பகுதியைச் சேர்ந்த மாநிலங்கள் ஏதேனும் புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக, அப்பகுதியைச் சேர்ந்த பிற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறவேண்டுமென ஏற்கெனவே இந்திய அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இதுவரை தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடக அரசுப் பெறவில்லை. 1961ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஒகெனக்கல் அருகே இராசி மணல் என்னும் இடத்தில் அணைக் கட்டி புனல் மின் நிலையம் ஒன்றை அமைக்கத் தமிழ்நாடு வகுத்தத் திட்டத்திற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. எனவே, திட்டக்குழுவும், இந்திய அரசும் இத்திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. ஆனால், இப்போது ஒகெனக்கலுக்கு மிக அருகாமையில் கர்நாடக எல்லைப் பகுதியில் மேகதாட்டுத் திட்டம் அமைப்பதற்கு இந்திய அரசு அனுமதி கொடுத்தால், அது தமிழகத்தின் நலன்களைப் பெரிதும் பாதிக்கும். இது தொடர்பாக 1961இல் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது என்பதை நினைவுப்படுத்துகிறேன். ஏற்கெனவே, நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவைக் காவிரிப் பிரச்சனையில் அளித்தத் தீர்ப்புகளையோ அல்லது இந்திய அரசின் வழிகாட்டுதல்களையோ கர்நாடகம் கொஞ்சமும் மதிக்கவில்லை. 1974ஆம் ஆண்டிற்கு முன்பாக காவிரியில் 300 டி.எம்.சி.க்குக் குறையாமல் நமக்கு நீர் வந்து கொண்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் விளைவாக இப்போது 177 டி.எம்.சி. நீர் மட்டுமே அதுவும், கர்நாடகம் விரும்பினால் மட்டும் கிடைக்கும் நிலையில் தமிழகம் தவிக்கிறது. இப்பிரச்சனையில் தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மேகதாட்டுத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.