நடிகை அமலாபால் தயாரித்து நடிக்கும் ‘கடாவர்’ படம் ஆகஸ்ட்டு 12ல் வெளியீடு

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.*******

கடாவர்’ படத்தின் தயாரிப்பாளரும், கதையின் நாயகியுமான நடிகை அமலா பால் பேசுகையில், ”கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். ரசிகர்களையும் பார்வையாளர்களையும் நேரில் காணும் போது உற்சாகம் பிறக்கிறது. அபிலாஷ் பிள்ளை பிள்ளையும், இயக்குநர் அனூப் எஸ். பணிக்கரும் என்னை சந்தித்து ‘கடாவர்’ படத்தின் கதையை கூறியதும், என்னுடைய கதாபாத்திரம் புதுமையானதாகவும், வலிமையானதாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். பிறகு அவர்கள் தயாரிப்பாளர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டதை கண்டு, தயாரிப்பாளராகவும் பணியாற்ற சம்மதம் தெரிவித்தேன். இந்தத் தருணத்தில் எனக்கு உற்ற துணையாக திகழ்ந்த என்னுடைய தாயார் மற்றும் சகோதரருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்த திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்ட போது பல வடிவங்களில் தடைகள் உருவானது. இந்தப் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர். கடவுளின் ஆசியாலும், மறைந்த என்னுடைய தந்தையாரின் ஆசீர்வாதத்தினாலும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எங்களின் கடாவர் படத்தினை ஐந்து மொழிகளில் வெளியிட ஒப்புக்கொண்டது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓ .டி. டியில் ‘கடாவர்’ வெளியாகிறது.‌ பல மெடிக்கல் கிரைம் திரைப்படங்கள் வெளியானாலும், தடயவியல் துறையில் இதுவரை படைப்புகள் அதிகமாக வெளியானதில்லை. காவல்துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என அனைத்து விசயங்களும் நேர்த்தியாக இருக்கும். ரசிகர்கள் வழக்கம்போல் இந்த ‘கடாவர்’ திரைப்படத்திற்கும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.