மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் அந்தமானில் மீனவர்களுடன் உரையாடல்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் இன்று அந்தமான் பயணம் மேற்கொண்டார். போர்ட் பிளேரில் உள்ள அகில இந்திய வானொலி அதிகாரிகளுடன் உரையாடிய அவர், வானொலி செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்குள்ள மீனவர்களை சந்தித்த அமைச்சர், மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தார். 

விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் மீனவர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்தும், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பது குறித்தும் அவர் விளக்கினார். பிரதமரின் மத்ஸ்ய சம்படா யோஜனா என்ற முக்கிய திட்டத்தை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இது வரை இல்லாத அளவில் 2020-21 முதல் 5 ஆண்டுகளுக்கு 20050 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இது செயல்படுத்தப்படுகிறது என்று டாக்டர் எல் முருகன் தெரிவித்தார்.