தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் 23-08-2023  தினம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார். 
 
யாழ்ப்பாணம் – கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. 
 
குறித்த சந்திப்பில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த துணைத்தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். 
 
இதன் போது தற்போது உள்ள நிலைமைகள் தொடர்பில் அமெரிக்க தூதுவர் கேட்டு அறிந்து கொண்டதுடன் தமிழ் மக்களின் அன்றாடம் தற்பொழுது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் அரசியல் தலைவர்களினால் அமெரிக்க தூதுவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பௌத்தமயமாக்கல், காணி அபகரிப்பு, அரசாங்கத்தின் பிழையான வரிக்கொள்கை மூலம் வைத்தியர்கள், புத்தியீவிகள் பெரும்பாலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் எனவும் அமெரிக்க தூதுவருக்கு, தமிழ் தலைவர் களினால் இதன் போது சொல்லப்பட்டது.