தமிழ்-தமிழப் பள்ளிகள் வளர்ச்சிக்காகப்* *பெற்றோர் – மாணவர்க்கு மூளைச்சலவை ?!

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த  புலியும் மீண்டும்

     ஒய்வின்றித் தொண்டுசெய்து தமிழைக் காக்கப்

பாய்ந்தெழுந்து வருவதுபோல் *மூர்த்தி* இன்று

     பலநண்பர் துணையுடனே வந்து விட்டார் !

சாய்கின்ற மலர்ச்செடியாய் *எஸ் . பி .  எம்* . இன்

       *தமிழ்-தமிழின் இலக்கியத்தின்* வாட்டம் போக்கப்

பாய்நீராய் ஆகிவிட்ட கல்வி யாளர் –

      பாங்கர்களை ஒருங்கிணைத்தே உள்ளார் மூர்த்தி !

தமிழ்த்தொடக்கப் பள்ளிகட்கே எத்த னையோ

       சங்கடங்கள் இருந்தாலும் பெருந்து யர்கள்

தமிழ்ப்பள்ளி ; அதில்கற்கும் மாண வர்கள்

       தமக்கில்லை இன்றுவரை ; என்றிட் டாலும்

தமிழ்ப்பள்ளி யைத்தாண்டி *இடைநி லையில்*

      தமிழ்மொழியை – இலக்கியத்தை எளிதாய்க் கற்கத்

தமிழ்மாணாக் கர்களென்றும் காணும் தொல்லை

    தமைச்சொல்ல வார்த்தைகளே இல்லை ஐயோ !

தொடக்கமுதல் பல்கலைகள் வரைக்கும் இன்று

     தூய்தமிழைக் கற்பதற்கே அனும திக்கும்

நடைமுறையை அரசென்றும் கொண்டே உள்ளார் !

      நமக்கெல்லாம் இதுதெரியும் ; மேலும் ஒன்றாம் ,

இடைநிலையில் *தமிழ்மொழியோ(டு) இலக்கி யத்தை*

       இருபாடம் எனத்தமிழில் படித்திட் டாலும்

தடையின்றிப் பிறபாடம் அனைத்தி னையும்

      தனித்து *மலாய் , ஆங்கிலத்தில்* கற்கின் றார்கள் !

இதனால்நம் மாணவர்கள் தமிழைக் கற்றால்

     இடைநிலையில் நிச்சயமாய்ப் பிறபா டங்கள்

எதனிலுமே தோல்வியையே முழுதும் காண்பார்

    எனப்பெற்றோர் தவறாகக் கருது கின்றார் ;

அதனால்தான் இடைநிலையில் தம்பிள் ளைகள்

     அருந்தமிழைக்  கற்பதற்கு  ஒப்பா துள்ளார் !

இதுசரியா ? தமிழ்தவிரப் பிறபாடம் மலாயில் மற்றும்

     இகமொழியாம் ஆங்கிலத்தில் கற்கும் போது….

எப்படித்தான் *இடைநிலையில், பல்க லையில்*

    இந்தியமா ணாக்கர்களும் தோல்வி காண்பர் ?   

அப்படித்தான் ஆராய்ந்து பார்த்தி டாமல்

    அரைவேக்காட்(டு) அறிவோடு தமிழைத் தள்ளும்

தப்பைத்தான் ஐம்பதுக்கும் மேலே உள்ள

    சதவிகித இந்தியர்கள் செய்கின் றார்கள்

துப்பளிக்கா விட்டாலும் தமிழர் யார்க்கும்

       *சூடு,சொர ணை* தமிழும் தரவா இல்லை ?

தமிழ்-தமிழப் பள்ளியெலாம் உயர வேண்டில்

       தமிழ்கற்கும் மாணவர்கள் பெருக வேண்டும்

தமிழ்கற்கும் மாணாக்கர் அதிக ரிக்கத்

     தமிழ்ப்பெற்றோர் பிள்ளைகளை அனுப்ப வேண்டும்

தமிழ்ப்பள்ளிக்(கு) அவரிதனைச் செய்யா விட்டால்

      தமிழ்ப்பெற்றோர்- அவர்பிள்ளை *மூளை* தம்மைத்

தமிழுக்காய்ச் *சலவை* செய்தே ஆக வேண்டித்

     தனித்து *மனோ தத்துவர்கள் படையே* வேண்டும் !

                                                                                         *பாதாசன்*

*அரும்பொருள் விளக்கம் :-*

பாங்கர்களை – நண்பர்களை

இகமொழி – உலக மொழி

துப்பளிக்கா – உணவளிக்கா