கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே – தமிழ் தேசிய பேரியக்கம் ஆர்பாட்டம்

கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே! தடுப்பூசியால் பாதிக்கப்பட்டோர்க்கு இழப்பீடு வழங்கு!” என்ற முழக்கத்தோடு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு முன்னெடுத்த தடுப்பூசித் திணிப்புக்கெதிரான ஒன்றுகூடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு – கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கித் திணிக்கக் கூடாது, விரும்புவோர்க்கு மட்டும் தடுப்பூசி செலுத்த வேண்டும், தேர்வு அச்சத்தைக் காட்டி குழந்தைகளிடம் ஊசியைக் கட்டாயப்படுத்தக் கூடாது, தடுப்பூசி போட்ட பின்பு உயிரழந்தோர் மற்றும் உடல் நலமிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (23.02.2022) காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு சார்பில், எழுச்சிமிகு ஒன்றுகூடல் நடைபெற்றது.

தடுப்பூசித் திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள “மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு” சார்பில் நடைபெற்ற இவ்வொன்று கூடலில், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் அரசின் தடுப்பூசித் திணிப்புக்கெதிராகப் பல்வேறு ஊர்களில் போராட்டங்களை முன்னெடுத்தவர்களும், அக்குபங்சர், சித்த மருத்துவம், ஓமியோபதி போன்ற மாற்று மரபுவழி மருத்துவம் மேற்கொள்ளும் மருத்துவர்கள் மட்டுமின்றி அலோபதி மருத்துவர்களும், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் என பல தரப்பினரும் தங்கள் குடும்பங்களுடன் போராட்டத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்தனர். “திணிக்காதே! திணிக்காதே! தடுப்பூசியைத் திணிக்காதே!”, “ஆக்காதே! ஆக்காதே! மக்களை பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் சோதனை எலிகளாய் ஆக்காதே!” என கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணர்வெழுச்சியுடன் போராட்ட முழக்கங்களை எழுப்பினர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் திரு. அ. ஆனந்தன் முழக்கங்களை எழுப்பினார்.

கூடியிருந்த மக்களிடையே, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், அக்குஹீலர் அ. உமர் பாரூக் M.Acu., M.Sc (Psy)., Ph.D. (Psy)., (அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு), மருத்துவர் கோ. பிரமோ M.D (Hom)., (மக்கள் அறிவியல் இயக்கம்), மூத்த ஊடகவியலாளர் திரு. கா. அய்யநாதன், பேரழிவுக்கு எதிரான பேரியக்கத் தலைவர் திரு. க.கா.ரா. லெனின், மருத்துவர் பி. ஹரிசங்கர் M.B.B.S., (மக்கள் அறிவியல் இயக்கம்), மருத்துவர் முகமது யூசுப் (அனைத்து தமிழ்நாடு அக்குபஞ்சர் & மாற்றுமுறை மருத்துவ சங்கம் – ATAMA), புதிய தலைமுறை மக்கள் கட்சி நிறுவனர் – சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் திரு. பா. கோபாலகிருட்டிணன், கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான போராட்டக் குழு – புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் திரு. கோ. அழகர், இயற்கைவழி வாழ்வியலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. இரா. சுதாகர், கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு – மதுரை ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்தாசன், த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர் க. முருகன், ஊடகவியலாளர் திரு. ஜோஸ் ஃபீட் ஆகியோர் தங்கள் ஆழமான கருத்துரைகளை வழங்கினர். அக்கு ஹீலர் ம. அருள்ராஜ் B.Sc(Acu)., நன்றி கூறினார். மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு திரு. க. அருணபாரதி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.   மூத்த ஊடகவியலாளர் திரு. சாவித்திரி கண்ணன், கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவ சங்கச் செயலாளர் திரு. தங்க சண்முக சுந்தரம், ”மனிதி” செல்வி, சமூகச் செயல்பாட்டாளர் திரு. ரோஸ்  உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். மறுபுறத்தில், சமூக வலைத்தளங்கள் வழியே நேரலையில் இப்போராட்டத்தை பல்லாயிரக்கணக்கானோர் கண்ணுற்றனர்.