இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பத்தினர் நடத்திய சட்டப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது

இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து ஒரு தமிழ்க் குடும்பம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் ஆஸ்திரேலியாவிலேயே தொடர்ந்து தங்கலாம் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈழத் தமிழர் நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா இருவரும் கடந்த 2012 மற்றும் 2013-ம் ஆண்டில் தனித்தனியாக ஆஸ்திரேலியாவுக்குப் படகு மூலம் அகதியாக வந்தனர். இவர்கள் இருவரும் மெல்போர்னில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்தபோது காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இதில் நடேசலிங்கத்துக்கும், பிரியாவுக்கும் ஆஸ்திரேலியா வில் இரு பெண் குழந்தைகள் பிறந்தன. மூத்த மகளான கோபிகாவுக்கு தற்போது 6 வயதும், 2-வது மகளான தருணிகாவுக்கு 4 வயதும் ஆகிறது. இந்நிலையில், இந்த ஈழத் தமிழ்க் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தற்காலிகமான விசா காலம் முடிந்துவிட்டதால், அவர்களை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த ஆஸ்திரேலியாவின் கன்சர்வேட்டிவ் அரசு முடிவு செய்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து மெல்போர்ன் நகரில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து நடேசன் குடும்பத்தை விமானம் மூலம் இலங்கைக்கு ஆஸ்திரேலிய அரசு அனுப்ப முடிவு செய்தது. ஆனால், இலங்கையில் பிறந்த நடேசலிங்கத் துக்கும், அவரின் மனைவி பிரியாவுக்கும் மட்டுமே குடியுரிமை இருக்கிறது. ஆஸ்திரேலியா வில் பிறந்த அவர்களின் இரு குழந்தைகளான கோபிகா, தருணிகா இருவருக்கும் இலங்கை அரசு குடியுரிமை வழங்காது. ஆஸ்திரேலய அரசும் குடியுரிமை வழங்காது. இலங்கைக்குத் தங்கள் பெற்றோருடன் சென்றாலும் இந்த இரு குழந்தைகளும் நாடற்றவர்களாகவே இருக்க வேண்டி வரும் என்ற சூழல் இருந்தது. இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி முறையிடப்பட்டது

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹீதர் ரிலே, ஈழத் தமிழர் குடும்பத்தை இலங்கை க்கு நாடு கடத்தத் தடை விதித்தார். ஆனால், அவர் இந்த உத்தரவு பிறப்பிக்கும்போது, விமானம் ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரை விட்டு இலங்கை நோக்கிப் புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்தது. இது குறித்து நீதிபதி ஹீதரிடம் அதிகாரிகள் விமானம் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், நீதிபதி ஹீதர் அதற்குச் சம்மதிக்காமல் விமான நிலை யத்துக்குத் தொலைபேசியில் பேசி விமானத்தை உடனடியாகத் தரையிறங்க உத்தரவிட்டார். அதன்பின் தரையிறங்கிய விமானத்தில் இருந்து நடேசன் குடும்பத்தினர் மெல்போர்ன் நகரில் தங்கவைக்கப்பட்டனர். தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்தக் கூடாது எனக் கோரி மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய மக்கள் மிகப்பெரிய அளவில் பேரணியும், போராட்ட மும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரே லியாவில் அகதிகள் வசிக்கும் கிறிஸ்துவமஸ் தீவில் நடேசன், பிரியா குடும்பத்தினர் தங்கியுள்ளனர். இந்நிலையில் தங்களை ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தத் தடை விதிக்கக் கோரி நடேசன் குடும்பத்தினர் ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், இந்த மனுவை எதிர்த்து ஆஸ்திரேலிய அரசும் வழக்குத் தொடர்ந்தது. பெடரல் நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள்அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், “தமிழ்க் குடும்பத்தினர் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தங்கலாம். ஆஸ்திரேலியாவில் பிறந்த இரு குழந்தைகளுக்கு விசா வழங்க மறுக்கக் கூடாது. தமிழ்க் குடும்பத்தினர் தங்கள் மகள்களுக்கு விசாவுக்கு விண்ணப்பித்து விசா பெறலாம். நடேசன் குடும்பத்தினர் தொடர்ந்து ஆஸ்திரேலியா வில் தங்குவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்” என தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆஸ்திரேலிய அரசு உயர் நீதிமன்றம் சென்றாலும் மேல்முறையீடு ஏற்கப்படுமா என்பது சந்தேகம்தான். ஆதலால், ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி தமிழ்க் குடும்பத்தினர் வென்று அங்கேயே தங்க உள்ளனர்.