கிராமப் புற மக்களுக்கு இது அநீதி இல்லையா? – நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டம் பற்றி சு.வெங்கடேசன் எம்.பி.எழுப்பிய கேள்விக்கு கிராமப் புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அளித்துள்ள பதிலில் இத்திட்டத்தின் கீழ் தகுதி வேலை நாட்களை அதிகரிக்கிற எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். நாடு முழுமையும் சராசரி வேலை நாட்கள் ஏப்ரலில் 12, மே 17, ஜூன் 6, ஜூலை 14, ஆகஸ்ட் 12 என்ற அளவில் இருந்துள்ளன என்று பதில் அளித்துள்ள அமைச்சர் தோமர் இந்த சராசரி தமிழகத்தில் ஏப்ரலில் 4, மே 7, ஜூன் 9, ஜூலை 10, ஆகஸ்ட் 8 என்ற அளவில் இருந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தில் தகுதி வேலை நாட்களை 100 நாட்களில் மேலும் அதிகரிப்பதற்கான முன் மொழிவு ஏதும் அரசின் தரப்பில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் எம்.பி கூறியதாவது: நாடு முழுக்க வேலையிழப்புகள் கோடிக் கணக்கில் ஏற்பட்டுள்ள நிலையிலும், புலம் பெயர் தொழிலாளர் பலர் சொந்த கிராமங்களில் தஞ்சம் புகுந்துள்ள நிலையிலும் ஊரக வேலைத் திட்ட நாட்களை அதிகரிக்கிற எண்ணம் இல்லை என்ற அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது. 200 நாட்களாக தகுதி வேலை நாட்களை உயர்த்த வேண்டுமென்று விவசாய அமைப்புகளும், இடதுசாரிக் கட்சிகளும் எழுப்பி வருகிற கோரிக்கையை அரசு பரிசீலிக்க மறுப்பது கிராமப் புற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். தமிழக சராசரி தேசிய சராசரியை விடக் குறைவாக, கடந்த ஐந்து மாதங்களில் 4 மாதங்களில் இருந்திருக்கிறது என்பது அமைச்சர் பதிலில் வெளிப்பட்டுள்ளது. தமிழக அரசு இது குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.